பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

249


எழுதப்படுதற்கியைபுண்டு, இதனை யாராய்தல் வேண்டுமென எண்ணி மேலும் முயலுமிடத்து, கருங்குளம் என்பதோர் ஊரென்பது தெரிந்தது. தென்பாண்டி நாட்டுத் திருநெல்வேலி மாவட்டத்தில் கோட்டைக் கருங்குளம் என்றோர் ஊர் இருக்கிறது. அதனை அவ்வூர்க்கல் வெட்டுக்கள் 'கருங்குள - வளநாட்டுக் கருங்குளம்' என்று கூறுகின்றன. ஆகவே, கருங்குளம் என்ற ஊருண்மை தெள்ளிதாயிற்று.

இனிக், கருங்குளத்துக்கும் ஆதனாருக்கும் தொடர் பென்னையென்று காண்டல் வேண்டியதாயிற்று. அவ்வூர்க் கல்வெட்டொன்று அதனைக் 'கருங்குள வளநாட்டுக் கரிகால் சோழ நல்லூரான கருங்குளம் (A.R. No. 269 of 1927-28) என்று குறிக்கிறது. கரிகால் சோழனுக்கும் ஆதனார்க்கும் தொடர் புண்டென்பது அவர் அவனைப் பாடிய பாட்டுக்களால் தெளிவாகிறது. ஆகவே, கருங்குளத்துக்கும் கரிகாற் சோழனைப் பாடிய ஆதனாருக்கும் தொடர்பு உள தாதல் எளிதாம். ஆகவே, கருங்குளவாதனார் காலத்தே அக்கருங்குளம் அவன் பெயரால் கரிகாற் சோழநல்லூராகப் பெயரிடப் பெற்று ஆதனார்க்கு அவனால் முற்றூட்டாக வழங்கப்பட்டிருக்கு மென்பது பொருந்தாதொழியாது. கருங்குளத்துக்கு உரியவராகிய ஆதனார் தென் பாண்டி நாட்டுக் கருங்குளவாதனார் எனப்படுவது இயல்பாம்.

இதனை இறுதியிற் குறிப்பது குறித்தே கரிகாலனது தென் பாண்டி நாட்டு வரவும், ஆங்கு அவனைச் சிறப்பித்துப் பாடிய புலவர்க்கு ஊர் வழங்கியதும் இக் கட்டுரையிடையே வற்புறுத்தப்பட்டன. பாண்டி நாட்டில் கரிகாலனைப் பாடியவர் கருங்குளவாதனார்; அவர்க்கு அவன் அளித்தவூர் கரிகால் சோழ நல்லூரான கருங்குளம். ' இக் கருங்குளத்திலுள்ள இராச சிம்மேச்சுரத்திற்குத் திருவாங்கூர் மன்னரும் திருப்பணி செய்துள்ளனரென அவ்வூர்க் கல்வெட்டு (A.R. 287 of 1927-28) கூறுவது பற்றி அவ்வூர்க்குச் சேரர் தொடர்பும் உண்டென உணரலாம், என்பது முடிபாம்.