பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

செம்மொழிப் புதையல்


தோலாமொழித் தேவர் எழுதிய சூளாமணியின்கண், திவிட்டன், விசயன் என்ற இரண்டு அரச குமாரர்கள் வரலாறு கூறப்படுகிறது. இவர்கள் வரலாறு வைதிக சமயநூற் கதைகளுள் வரும் வரலாற்றைப் பெரிதும் ஒத்திருக்கிறது. இடையிடையே சமண் சமயக் கருத்து விரவி நிற்கிறது. எனினும், சிந்தாமணி போல, வைதிக சமயநெறி நிற்பவரும் விரும்பத்தக்க அத்துணை உவமநலம் உடையதன்று என்றே கூற வேண்டும்.

கண்ணன் கடல்வண்ணன் என்றும், பலராமன் வளை வண்ணன் என்றும் தமிழ் நூல்கள் கூறும். ‘பால்நிற உருவிற் பனைக் கொடியோனும், நீல்நிற உருவின் நேமியோனும் என்றிரு பெருந்தெய்வமும் உடனின்றாங்கு (புறம் ௫௰௮) என வரும் திவிட்டனைக் கண்ட மகளிர், "கடலொளி மணிவணன் கனவினில் வந்தெமது, உடலகம் வெறுவிதாய் உள்ளம் வவ்வினான்" (குமார ௰௨) என்றும், விசயனைக் கண்டவர் "வார்வளை வண்ணன் எம் மனத்துளான் பிறர், ஏர்வளர் நெடுங் கணுக்கு இலக்கமல்லனால்" (௰௬) என்றும் கூறினார் என்பர். இதனால் நிறமொத்தல் கூறியவாறாம்.

கண்ணன் கஞ்சன் விடுத்த குவலயா பீடத்தை அடர்த்தான்; திவிட்டன் அச்சுவகண்டன் விடுத்த சிங்கத்தை வாய்பிளந்தான். கண்ணன் பெருகி வந்த மழையைத் தடுப்பது குறித்துக் குன்றினை யெடுத்துக் குடையாகப் பிடித்தான்; திவிட்டனும் புலவர் ஒதிய வரலாற்றிற்கேற்பக் கொடிமாசிலை என்னும் குன்றத்தை யெடுத்துப் புகழ் நிறுவினான்.

“எரிமணி கடகக்கை இரண்டு மூன்றியப்
பெருமணி நிலம்பில மாகக் கீழ்நுழைத்
தருமணி நெடுவரை யதனை ஏந்தினான்
திருமணி நெடுமுடிச் செல்வன் என்பவே”

(அரசு ௲௮௰௨) எனச் சூளாமணி கூறுகிறது.

கண்ணன் பின்னைப் பிராட்டியை மணந்தான்; திவிட்டன் சுயம்பிரபை என்னும் வித்தியாதர மகளை மணந்தான். கண்ணன் சிசுபாலனை ஆழி யெறிந்து வென்றான்; திவிட்டன் அயக்கிரீவனை ஆழி யெறிந்து வென்றான். இவ்வாறு திவிட்டன் செயல் பலவும் கண்ணன் செயல்களோடு ஒத்திருத்தலை,

“கோடிசிலை யெடுத்தான் கோளிமாவாய் போழ்ந்தான்
ஆடியல் யானை அயக்கிரீவனை அடித்தான்