பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

செம்மொழிப் புதையல்


"இசுலாம்" சமயம் என்றே வழங்கப்பெற்றது. இச் சமயம் வளர வளர, அரபியர் இடையில் இருந்த தீநெறிகளும் தீயொழுக்கங்களும் நீங்கின; அவர்கள் அனைவரும் உடன் பிறந்தாரெனவுணர்ந்து தம்முள் ஒற்றுமையுண்டு பண்ணிக் கொண்டனர். தங்கட்குப் பெருநலம் செய்த இச்சமயவுணர்வை நிலவுலகில் யாண்டும் பரப்ப வேண்டுமென்ற வேட்கைமிக்கு, ஒரு நூறு யாண்டுகளுக்குள், பாரசீகம், துருக்கித்தானம், ஆப்கனித்தானம் என்ற இன்னோரன்ன நாட்டுமக்கள் அனைவரையும் மகமதி சமயத்தவராக்கிக் கொண்டனர். பாரசீகரும், நம் இந்திய நாட்டின் வடபகுதியில் அக்காலத்து மல்கியிருந்த ஆரியர்களைப் போல, தீயினைக் கடவுளாகக் கருதி வழிபடும் வழக்குடையராயிருந்தவர்கள். அவர்களுட் சிலர், இம்மகமதிய சமயத்தைமேற் கொள்ளாதவராய், இந்தியநாட்டுட் புகுந்து குடியேறினர். மகமதியரும் நெடுங்காலம் வரையில், இப் பாரசீகருடனும், தார்த்தருடனும், ஏனைய வடபுலத்தவருடனும் போர் நிகழ்த்திய வண்ணமேயிருந்தமையின், நம் இந்திய நாட்டில், இப்பொழுதைக்குச் சுமார் தொள்ளாயிரமாண்டு கட்குமுன் வரமாட்டாது நின்றனர்; பின்னரே, அவர்கள் நம் இந்திய நாட்டிற்கு வரலாயினர்.

இவர்கள், இந்நாட்டிற்கு வருதற்கு முன்பே பாரசீகருட் சிலர் போந்து குடியேறி விட்டனர் என்று முன்பு கூறியுள்ளோம். அவர்கட்கு முன் வேறுபல நாட்டினரும் வந்து இங்கே குடிபுகுந்திருந்தனர். அவர்கட்கும், மகமதியர்கட்கும் பெரியதொரு வேறுபாடு உண்டு. முன்னே வந்தவர்கள் தம் சமய வுணர்வை நாட்டிற் பரப்பவேண்டுமென்ற நோக்கமுடைய வரல்லர்; இவர்கட்குப் பின்னர்ப் போந்த ஐரோப்பியரும் அவ்வாறு வந்தவரல்லர்; இவர்கள் மட்டில் சமயத் தொண்டினைக் குறிக்கோளாகக் கொண்டு வந்தனர் என்பது பல சான்றுகளால் விளங்குகின்றது. மேலும் இவர்கட்கு முன்னே போந்தவர், நம் நாட்டிற் குடி புகுந்து வாழ்ந்திருந்த ஏனை மக்களோடு கூடி, ஒருமையுற்று, அவர்கட்குரிய ஒழுக்கம், வழிபாடு முதலிய நெறிகளைத் தாமும் ஏற்று, இந்தியரோடு இந்தியராய் இயைந்திருந்தனர். அவர்கள் யவனர், ஸ்கிதியர், மங்கோலியர், பார்த்தியர் முதலிய பலராவர். அவர்கள் நாட்செல்லச் செல்ல, இந்துக்களுள் இந்துக்களாய், தம் பெயர், மொழி, சமயம், ஒழுக்கம், உடை, மனப்பான்மை என்ற பலவற்றினும் ஒன்றிவிட்டனர். கிறித்து பிறப்பதற்கு இரு