பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

25


வரைந்துணர்தற்கரிய பரப்புடையது. அசைக்கலாகாத மலை போன்று அலைக்கலாகாத திட்பம் வாய்ந்தது. எந்த நூலையும் மேற்போக்காகப் படித்து முடிக்கும் பழக்கம் அவருக்கு இல்லை. படித்தது போதுமென்று விடுத்திராமல் பல நூல்களையும் பலமுறை பயின்று நயங்கண்டு பயன் கொள்ள முயல்வது அவர் இயல்பு; அரிய நூற்பொருள்களையும் துருவியாராய்ந்து கடிதிற் கண்டு நெடிது போற்றுவது அவர் சிறப்பு. சங்கத்தொகை நூல்கள், திருக்குறள், பெருங்காப்பியங்கள், சிறு காப்பியங்கள், கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகிய இலக்கியங்களும், தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம், சைவ சாத்திரங்கள் ஆகிய சமய நூல்களும், தொல்காப்பியம், பிரயோக விவேகம், வீரசோழியம், இலக்கண விளக்கம், இலக்கண விளக்கச் சூறாவளி, யாப்பருங்கலம் ஆகிய இலக்கண நூல்களும் அவற்றிற்குப் பண்டையாசிரியர்கள் கண்ட உரைகளோடு அவருக்கு மனப்பாடம். இலக்கியத்திலும் இலக்கணத்தில் அவருக்கு ஈடுபாடு மிகுதி. தொல்காப்பியத்தில் அவருக்குள்ள தேர்ச்சியும், அதன் பல்வேறு உரைகளில் அவர் அரிதில் முயன்று பெற்றுள்ள பயிற்சியும், ஆராய்ச்சியும் நான் அறிந்து அனுபவிக்கும் பேறு பெற்றவை. இலக்கியங்களுள் சிறப்பாகச் சங்கத்தொகை நூல்களிடத்தும், திருக்குறளிடத்தும் அவர் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். முற்காலக் காப்பியங்களுள் சிந்தாமணி யும், பிற்காலக் காப்பியங்களுள் கம்பராமாயணமும் அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவை. சிந்தாமணியின் தமிழ்ச் சுவையையும், கம்பராமாயணத்தின் கவிச் சுவையையும் அவர் தெவிட்டாமல் நுகர்ந்து திளைப்பவர்.

பிள்ளையவர்களின் புலமை ஒரு நெறிக்கு உட்பட்டதன்று; பல துறைகளில் பாய்ந்து பரவியது. இலக்கியம், இலக்கணம், சமயம், அளவை, வரலாறு, கல்வெட்டு ஆகிய பல்வேறு துறைகளுள் ஒவ்வொன்றிலும் தனித்தனிப் புலமை பெற்றவர் பலர் இருக்கக் கூடும். ஆனால், பிள்ளையவர்களைப் போல அவ்வனைத்தினும் ஆழ்ந்தகன்ற புலமை பெற்றவர் அரியராவர். அவர் எடுத்துக்கொண்ட நூல் எதுவாயினும் அதனைப் படித்தறிவதோடு அமையாமல் தம் நுண்மாண்நுழைபுலத்தால் நுணுகி ஆராய்ந்து அதன் உண்மைப் பொருளை உணர்வதில் ஆர்வமும் முயற்சியும் உடையவர்; பிறர் கடுமையானவை என்று