பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

279


இனி, ஜூலியன் ஹக்ஸிலி (Julian Huxley) என்பார் உலகில் உயிர்களின் தோற்ற வரலாற்றை யாராய்ந்து கூறிச் செல்லும் கூற்றுக்களில் A.H. காம்ப்டன் (A.H. Compton) கூறுவனவற்றிலும், விஞ்ஞானமும், தத்துவஞானமும் தம்முள் மயங்கிப் பலதலையான முடிவுகண்டு அலமருவது நன்கு புலனாகும். அன்றியும், அணுவைப்பற்றிய ஆராய்ச்சி தோன்றி அவர்களது மயக்கத்தை மிகுதிப்படுத்துகிறது. பெளதிக ரசாயன அணுக்களின் கூட்டுறவால் உண்டாகும் பொருள்களினிடையே உயிரணுக்கள் நிலவுகின்றன. இந்த உயிரணுக்கள் எங்ஙன முண்டாயின எனக் காணும் விஞ்ஞானிகள் பெருமயக்கமுற்று நிற்கின்றனர். இதுகாறும் ஒரு விஞ்ஞானியும் உயிரணு வொன்றைப் படைத்தது கிடையாது. உயிரணுவென்பது பெளதிக அணுவோடு கூடியே யிருக்கிறது. அவ்வணுவின் பெளதிகப் பகுதிக்கு வேறாக யாதும் அதன்கண் இதுகாறும் காணப்பட வில்லை. பெளதிகப்பகுதியின் வேறாக உயிர்த் தன்மை, அதன்பால் எங்ஙன முண்டாயிற்றென ஆராய்ந்த விஞ்ஞானிகள் ஒரு முடிவும் காணாது மயங்குகின்றனர். மேலும், அணுத் திரள்களின் இடையே, புரோடான்ஸ் (Protons), எலக்ட்ரான்ஸ் (Electrons), நீயூட்ரான்ஸ், (Newtrons), ஃபோட்டான்ஸ் (Photons) என்ற அணுக்கள் காணப்படுகின்றன. இவற்றிற்கு விஞ்ஞான முறையில் விளக்கங் காண முடியவில்லை. இவ்வாறு விஞ்ஞானம் காட்டும் காட்சிகள் பல நமது உண்மைக்கே விளக்கம் புலப்படுத்தாமல் உள்ளன. இன்னோரன்னவற்றால் மயக்கமும், தத்துவஞானமும் பண்டை நாளில் செய்த தவறுபற்றி அதன்பால் காழ்ப்பும் கொண்டு, கடவுளாகிய செம்பொருளுண்மை கண்டு மேற்கொள்ளாது, Blind Evolution எனவும், Clear sighted Orthogenesis எனவும் பிறவும் சில விஞ்ஞானிகள் கூறுவது பற்றி கூறுவதுபற்றி, கற்ற அறிஞர்கள் மயங்கி யொழிதல் கூடாது.