பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

செம்மொழிப் புதையல்


பணிவும் கொண்டு ஒழுகச் செய்தன. எத்தகைய துடுக்கான மாணவனும் அவரிடம் அடக்கமின்றி நடந்து கொள்ளத் துணிந்ததில்லை.

பாடம் சொல்லும் முறை

பிள்ளையவர்கள் உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகவும், கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகவும் பணியாற்றியவர். பாட போதனையில் அவர் கையாண்ட முறை புதுமையானது. மாணவர்களைச் சொற்களுக்குத் தனித்தனிப் பொருளுணரச் செய்வதினும் கருத்துகளை அவர்கள் உள்ளத்திரையில் உருவோவியமாகப் பதியச் செய்வதையே சிறப்பாகக் கருதி, அதற்கேற்பக் கற்பிக்கும் முறையை மேற்கொண்டார். சிறப்பாக, செய்யுட்பாடம் நடத்தும் பொழுது ஒவ்வொரு செய்யுளையும், கருத்து விளங்க, நிறுத்த வேண்டும் இடங்களில் நிறுத்தி, இடத்திற்கேற்ப எடுத்தும் படுத்தும், வலிந்தும் மெலிந்தும் தெளிவாக இசையோடு படித்துக் காட்டுவார். அவர் படிக்கும் பொழுதே பாட்டின் திரண்ட கருத்து மாணவர்களின் மனத்திரையில் முழு உருவம் கொண்டு. தெள்ளத்தெளியப் பதிந்துவிடும். கருத்து விளக்கத்தின் துணையால் பாடலில் உள்ள சொற்கள் பலவற்றிற்கும் மாணவர்கள் தாமே பொருள் உணர்ந்து கொள்வர். அவர்கட்குப் பொருள் விளங்காத அருஞ்சொற்கள் எவையேனும் இருப்பின் கேட்டறிந்து, அவற்றிற்கு மட்டும் பொருள் கூறுவார். பொதுவாக இலக்கண பாடம் என்றால் மாணவர்கள் மருண்டுமயங்கி அஞ்சி விலக்குவது வழக்கம். ஆனால், பிள்ளையவர்கள் இலக்கணம் கற்பிக்கும் இனியமுறை, மாணவர்கள் அதனை விரும்பிக் கேட்டுத் தெளிந்து மகிழச் செய்யும், பிள்ளையிடம் பயின்ற மாணவர்கள் பிற பாடங்களினும் இலக்கணத்திடமே மிக்க ஆர்வம் காட்டியதை நான் கண்டு வியந்திருக்கிறேன். உரைநடைப் பாடம் கற்பிப்பதிலும் அவர் தனி முறையைக் கையாண்டார். பாடத்தின் மையக் கருத்தைக் குறித்துக்காட்டி, ஒவ்வொரு பத்தியிலும் விளக்கப்பட்டுள்ள அதன் கூறுகளை வகைபட விரித்துரைத்து, முடிவில் அவற்றை நிரல்படத் தொகுத்துக் கூறி, மாணவர்கள் உணர்ந்து உளங்கொள்ள வேண்டிய சிறப்புச் செய்திகளை நினைவுறுத்தி முடிப்பார். இதனால் மாணவர்கள் கேட்ட பாடத்தில் தெளிவும் மன நிறைவும் பெறலாயினர்.