பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

செம்மொழிப் புதையல்


இவர் அளவற்ற ஆர்வம் கொண்ட அருளாளர். அதற்கேற்ப அரிய நூல்களையும் ஐயம் திரிபு அறியாமைக்கு இடமின்றி அருமையாகப் பாடம் சொல்வார். தாம் அரிதில் வருந்திச் சேர்த்த தமிழ் வளத்தைத் தம்மாணவர் வருந்தாமல் எளிதில் பெறுமாறு வாரி வழங்குவார். தாம் முயன்று வரைந்து வைத்துள்ள அரிய நூற்குறிப்புகளை மாணவர்கட்குக் கொடுத்துப் பயன்பெறச் செய்வார். தாம் பாடம் கேட்ட நூல்களைப் பிறர்க்கு முறையாகப் பாடம் சொல்லவும், கட்டுரை, ஆய்வுரைகள் வரையவும் அறிஞர் அவையில் அஞ்சாமல் அடக்கமாக உரையாற்றவும் மாணவர்கட்குப் பயிற்சியளிப்பார், தம்மைக் கண்டு அளவளாவ வரும் அறிஞர்கள், புலவர்கள், செல்வர்கட்குத் தம் மாணவர்களை அறிமுகப்படுத்தி வைப்பார்.

மாணவர்களின் ஆக்கத்தில் அவர் காட்டிய அக்கறைக்கும் ஆர்வத்திற்கும் எடுத்துக்காட்டாக என்னைப் பற்றிய சில செய்திகளை இங்குத் தந்துரைப்பது தவறாகாது என்று கருதுகின்றேன். நான் பிள்ளையவர்களிடம் மாணவனாக அணுகியபொழுது ம. விசயராகவன் என்னும் பெயருடையவனாயிருந்தேன். அது என் பெற்றோர் எனக்கு இட்டு அழைத்த பெயர். நான் மாணவனாக அமர்ந்த சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் பிள்ளையவர்கள் என்னை நோக்கி, "உங்கள் பெயரில் ஒரு மாற்றம் செய்யலாம் என்று நினைக்கின்றேன். இராகவனுக்கு அடைமொழி எதற்கு? விசயம் இன்றி 'இராகவன்' இல்லை. ஆகவே, உங்கள் பெயரை அடைமொழியின்றி 'இராகவன்' என்று மாற்றிக் கொள்ளுங்கள்; ‘இராகவன்' என்னும் பெயர் எத்துணைச் சுருக்கமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது. பாருங்கள்" என்றார் நான் ஆசிரியரின் அன்பு ஆசையை அருளாணையாக ஏற்று அவ்வாறே மாற்றிக் கொண்டேன். அன்று முதல் என் பெயரை ‘ம.வி. இராகவாசாரியன்' என்று எழுதி வரலானேன். அதனைக்கண்ட பிள்ளையவர்கள் மீண்டும் ஒரு நாள் என்னை அழைத்து,"‘உங்கள் பெயரில் இன்னும் ஒரு மாற்றத்திற்கு இடம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்; 'ஆசாரியன்' என்பதற்குப் பதிலாக 'ஐயங்கார்' என்பதை இணைத்துக் கொள்ளுங்கள். ரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார்களோடு நீங்கள் ம.வி. இராகவையங்காராக இருங்கள்" என்றார். அதனைக்கேட்டு நான் உணர்ச்சிப் பெருக்கால் உடல் வேர்த்துப் போனேன். அன்று