பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

செம்மொழிப் புதையல்


தேர்வு வரிசைகளைக் கவனிக்கவில்லை' என்றேன். அவர் முதல் வகுப்பில் தேறியிருப்பது மட்டும் அன்று மாநிலத்தில் இரண்டாவது இடம் பெற்றிருக்கிறீர்கள். இது மிகவும் மகிழ்ச்சிக்குரியது: என்று கூறி, கற்கண்டு வாங்கிவரச் செய்து உடனிருந்த அன்பர்களுக்கு வழங்கினார். பிள்ளையவர்கள் மாணவர்களிடம் கொண்டிருந்த அன்புக்கும், அவர்கள் தேர்ச்சியிலும் உயர்விலும் அவருக்கு இருந்த அக்கறைக்கும் இந்நிகழ்ச்சி ஒன்றே சிறந்த சான்றாகும் அன்றோ?

பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டு உயர்நிலை எய்தியோர் பலர். அவர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் முன்பு தமிழ்நாடு சட்டமன்றத் தலைவராக இருந்த புலவர் கோவிந்தன் ஆவார். புலவர் கோவிந்தன் உயர்நிலைப் பள்ளியில் பயின்றுவந்த நாளிலிருந்தே பிள்ளையவர்களின் அன்புக்குரிய அருமை மாணவராக அமைந்தார். பிள்ளையவர்களிடம் தனித்தமிழ் பயின்ற மற்ற மாணவர்களும் சிறப்புறத் தேறிப் பட்டம் பெற்று உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மதிப்போடு பணியாற்றி வருகின்றனர். பிள்ளையவர்களின் மாணவர்கள் அனைவரிடத்தும் அவருக்குரிய தனி முத்திரையைக் காணலாம். அவர்கட்குப் புலவருலகில் மதிப்பு உண்டு.

இவ்வாறு தம் உழைப்பினாலும் தாம் உயர்ந்ததோடு தம்மை அடுத்தோர் பலரும் உயர்ந்து உய்ய உதவி வந்த ஒப்புரவாளராகிய பிள்ளையவர்கள் மறைந்தது பெரும் அவலம் தருகிறது. புலமை யாலும் தகுதியாலும் உரைவேந்தரின் திருமகனாகத் திகழும் துணைவேந்தர் ஒளவை நடராசன் நாளும் புகழ்வளர மிளிர்வது எனக்கு ஆறுதலை அளிக்கிறது. மகனறிவு தந்தையறிவன்றோ தமக்கென வாழாது தமிழே உயிர்ப்பாக, உணவாக, உரமாகக் கொண்டு தமிழுக்காகவே வாழ்ந்த அவர் திருப்புகழ் வளமை குன்றாத கன்னித் தமிழே போல இன்னும் பல்லாண்டுகள் மன்னுதல் உறுதி.

“கற்றவர்தாம் கண்ணீர்க் கடல்மூழ்கச் சாய்ந்து தமிழ்
உற்றகடல் மூழ்கி ஒளிதததே - பெற்ற நிலம்
எங்கும் ஒளிசெய்திருந்ததுரை சாமியெனும்
பொங்கு தமிழ்ச்சுடரிப் போது.”