பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

செம்மொழிப் புதையல்


யாண்டும் அமைதி நிலவிற்று. சிறு சுரும்புந் தேனாடிற்றன்று. புனையாவோவியம் கடுப்ப யாவும் போந்தனவாக, மீட்டும் அப்புலம்பிசை கல்லும் புல்லும் கனிந்துருக எழுந்தது. ஒசையியலுணர்ந்தாருளராயின், அது, இறந்துபடுநிலைக்கண் பல்பொறிப் பூச்சியொன்றிடும் மெல்லிசை யாமென வுணர்வர். மற்று, யான் அவ்வறிவிலேன் ஆதலின், நெடுங்காலந் தாழ்த்துப் பின்னரே யுணர்ந்தேன். உணர்ந்தேன், அவ்வோசையை நுனித்துக்கேட்குமவா மீக்கொண்டேனாக, ஆண்டெழுந்த பொருண்மொழி பின் வருமாறு கேட்டேன். அது,

"இருநிலம்புரக்கும் இறைவ! எவ்வுயிர்க்கும் நலம் பயக்கும் இயவுள்!! இச்சினைகளை யான் ஈண்டு இட்டிறத்தல் ‘ஒல்லுமா! ஆ! இவை தோன்றிய நாழிகைகூட இன்னும் கழிந்ததின்றே! அந்தோ! இதற்குள் யான் இறக்கின்றேனே! இன்னாதம்ம வுலகம், இனிய காண்க இதன் இயல் புணர்ந்தோரே என்றெல்லாம் பெரியோர் கூறுதல் உண்மையே! இறைவ! இறத்தற்குப் பணித்த நீ எனக்கு இப்பச்சிளஞ்சினைகளை யளித்தல் எற்றுக்கோ? இது முறைகொல் யான் இறந்துபடின், இவ்வருமந்த சினைகளைப் புரக்கவல்லுநர் யாவர் கொல்லோ? உயிர்க்குணவளித்தற்கு நீ உளையெனினும், ஒரு பற்றுக்கோடு மின்றி உயிர் நீத்தற்கன்றே என் உளம் உளைகின்றது! அந்தோ! ஏ! உலகே! என்னே நின் இயற்கை!! உனைத் துறக்கும் நிலைக்கணுற்ற என் உள்ளத்தை இங்ஙனம் தளைசெய்தலே நின் பண்புபோலும்!! நன்று! நன்று! அம்மவோ! புலன்கலங்க பொறிகலங்க நெறிமயங்குகின்றதே! அறிவு அழிகின்றதே! ஆவியும் அலமருகின்றதே!! ஐயகோ! யாரொடு நோகேன், யார்க்கெடுத் துரைப்பேன்! ஆசா கருளினர் யார்கொலோ. ஆ.!..." என்பது.

இங்ஙனம் கூறிப் புலம்பிக்கொண்டிருக்கும் பல்பொறிப் பூச்சி (வண்ணாத்திப்பூச்சி) ஒன்றினருகே பச்சிலைப் புழுவொன்று போந்து, இவ்வுரைகேட்டு எரியிடையிழுதென இனைந்து நின்றது. கண்ட அப்பூச்சி “உடைகலப்பட்டோர்க்கு உறுபுணை தோன்றி யாங்கு, இடர்ப்படும் என் முன்றோன்றிய அன்னாய்! வாழி! ஆருயிர் அலமர அழுது சாம்புவேனுக்கு நீ ஓர் உதவியருளல் கூடுங்கொல்லோ! உற்றுழி உதவுதல் உரவோர் கடனாதலின், உன்னைக் காண்டலும், உதவி நாடிற்று என் உள்ளம்” என்றலும், புழுவும் “பிறருறு விழுமம் துடைத்தல்