பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

51


பொரித்தலும், நின்னொப்பப் புழுக்களாமே யன்றி நீ

நினைத்துக் கூறும் வண்ணாத்திப் பூச்சிகளாகா. நீ இவ்வுண்மையை ஏலாதொழியினும் ஒழிக. உண்மை

பின்னர்ப் புலனாம். யான் சென்று வருவல்.

இங்ஙனம் கூறிக்கொண்டே பருந்து சேணோக்கிச் சிவ்வென்றெழுந்து பறந்து சென்றது. அன்றியும், ஆண்டேயிருந்து, புழுவிற்கு உண்மையுணர்த்தும் வகையாற் கலாய்த்தற்கு அப்பருந்து விரும்பிற்றன்று. ‘இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் அருள் நன்கு உடையராயினும், சான்றோர், பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்’ என்பர் பெரியார். ஆகவே, பருந்தும் கலாய்த்துப் பழியெய்தற்கு அஞ்சி யகன்றதென்க.

இங்ஙனம் விழுமிய நட்புக்கடம்பூண்ட பருந்து பிரிதலும். புழு மிக்கதோர் மருட்சிகொண்டு, செய்தொழிலறியாது திகைத்து அருகுகிடக்கும் சினைகளைக் காண்டலும், கண்ணிருகுத்தலும், பன்முறை யவற்றைச் சூழ்வரலும் செய்து கொண்டு வரும். இடையிடையே பருந்துகூறிய மொழிகளை எழுத்தளவாய் ஆயும்; பொருட்பயனைப் பன்முறையும் சூழ்ந்து நோக்கும்; தன் யாக்கைப் பண்பையும், பூச்சியின் பொலிவையும் மனத்தா னொப்பு நோக்கும். அதுகாலைப்பின் வருமாறும் நினைக்கும். அது:

"மாந்தர் இனத்தியல்பதாகும் அறிவு" என்பது தமிழ்மறை. இதுபற்றியன்றே, உயர்ந்தோர் கூட்டமே யுறவாய்க் கொண்டுழலும் இப்பருந்தும் மிக்க அறிவமைதியுடையதா மென்றெண்ணிக் கெட்டேன் ஒருகால், அது இம்முறை நெடிது சேணிற் பறந்திருக்கும், அதனாற்றான் இக்கலக்கம்! ஆ என்ன அலகைத் தன்மை உலகத்தோர் உண்டென்ப தில்லென்பான் வையத்து அலகை யென்று எண்ணப்படுமன்றோ ஆ உயிர்க் கூட்டத்துள், உயர்ந்தாரோடு கூடி வாழ்வனவும், கூடி வாழ்வதாகத் தம்மை யுயர்த்திக்கூறிக் கொள்வனவுமாய பலவுயிர்கள் முடிவில் எத்துணைப்பேதைமையும் கொடுமையும் உடையவாய்த் தோன்றுகின்றன. என்ன உலகம் பெறுதற்கரிய யாக்கை தமக்கு எய்திற் றென்றால், அது கொண்டு அறிவும் ஒழுக்கமும் அமையப்பெற்று, தக்கவின்ன, தகாதனவின்னவென ஒக்க வுன்னி, ஒப்பனவற்றைக் கோடலன்றோ யாவர்க்கும் ஒரு படித்தாய் வேண்டப்படுவது.