பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

53



பருந்து:- “உணர்ந்தன மறக்கும், மறந்தனவுணரும்" என்பர் பெரியோர். இனி மறவேன்; பொறுத்தருள்க. நிற்க, யான் முன்பு கூறியன நின்னையும், நின் சினைகளையும் பற்றிப் பொதுவாக வுணர்ந்தன; இற்றைஞான்று கூறப்போவது நின்பொருட் டுணர்ந்த சிறப்புப் பொருளாகும். அது, சுருங்கக் கூறின், நீயும் ஒருபகல் அப்பூச்சியே யாதல் வேண்டும் என்பது.

புழு :- என்னை கூறினை? ஏ, மடப்பருந்தே நிறுத்துக நின் சொற்பொழிவினை! நின்னொடு நிமிர்ந்தஞேயம் இப்பயனைப் பயக்கும் நீர்மைத்தாயின், என் கூறுவது. பாலாகித் தோன்றிப் பருகினார் ஆவிகொள்ளும் ஆலால நீர்மைத்தே நின்னன்பு என்பதே சாலப் பொருந்துவது. பொலிவு, திட்பம் முதலியவில்லா யாக்கையேன் என எண்ணி இன்னணம் என்னை இழித்துக் கூறுவான் செய்த கூற்றேயிது. அறிந்தேன். நின் தன்மையை யான் இன்றே உணர்ந்தேன். நீ பெருங்கொடியை அறிவிலி! திருத்த வியலாத் தீயை பேதை!! நாணின்றி என் முன்னிற்றல் நின் மாண்பிற்கே குறைவாம். இனி எனக்கு நின் பொங்கு சோறும் வேண்டா: பூசாரித்தனமும் வேண்டா. போதும் போதும்!!

இவ்வண்ணம் கூறிய புழுவின் நெஞ்சுசுடு நெடுமொழி வன்சிறைப்பருந்தின் மனத்துத் தினைத்துணையும் சினத் தீ கொளுத்திற்றின்று. என்னை, வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை யாகலின். மற்று, அது, அதன்மனத்துத் "திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று" என்னும் தெய்வத் திருவள்ளுவப் பயனை யெழச் செய்து, உறுவது தேராப் புழுவின்மாட்டு இரக்கமும், அதன் அறியாமைக்குக் கவற்சியுமே தோன்றச் செய்தது. வேறு என் செயும் அது அப்புழுவினை, "அன்ப, நீ வெகுண்டு கூறுவனயாவும் வெளிற்றுரைகளே. ஒருபுடை, அவை, நீ இச்சினை மாட்டுப் பூண்டொழுகும் பேராதரவின் உறுதியைப் புலப்படுத்துகின்றன வெனினும், ஆன்ற கேள்வியாற்றோட்ட செவியை யல்லை யென்பதைக் கர்ட்டாது கழியவில்லை. என் சொற்களை நீ ஏற்றுக் கொள்ளாயெனப் பண்டே யான் கூறினேனன்றோ," என்று கூறிற்று.