பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

செம்மொழிப் புதையல்


வெழுந்து அலைப்ப, அவற்றிடையே ஒடுங்கா வுள்ளமும் கலங்காக் கொள்கையு மல்லது பிறிதில்லாத அவர் மனத் திட்பம், அவ்வலைகளின் தலையை மிதித்தேகியது; விரிகடலைச் சுருக்கிற்று; நெடும்போது குறும் போதாக, நீர்க்காற்று நிலக்காற்றாக, பகல் மாய, இரா வணுக, வினை முடிவின் துனைவு மிக, அமெரிக்கப் புது நாட்டின் அடைகரை புலனாயிற்று, அடர்த் தற்கெழுந்த அலைகள் அவரைத் தலைமேற் சுமந்து தாலாட்டின; வன்காற்றாய் மடித்தற்கு நின்ற கடற்காற்று, மென்காற்றாய் அவர் மெலிவு தீர்த்து மகிழ்வித்தது, ஈதன்றோ வினைமாண்பு! என்றும் பொன்றாத இன்பவிசை நல்கும் - வினையினும், உழைப்பினும் ஏற்றமுடைய தொன்று உண்டுகொல்! இல்லை! இல்லை! எஞ்ஞான்றும் இல்லை!

இனி இவ்வுழைப்பினை நம் பண்டைச் சான்றோர் ஆள் - வினையென்றே வழங்கி யிருக்கின்றனர். உள்ளத்தின் ஆட்சி வழி நிற்கும் உடல் புரியும் வினை உழைப்பாதலால், அதனை ஆள்வினை யென்றது எத்துணை அழகுடைத்து! காண்மின், அவ்வாள்வினையே ஆடவர்க்கு உயிர் என்பதனால், ஆடவனை ஆண்மகன் என்றல் எத்துணை அறிவுடை மொழி! காண்மின் ஆண்மக்களே! உங்களது ஆண்மை, ஆள்வினையே, அயரா, உழைப்பே, அதனையுடைய நீவிர் என் செய்கின்றீர்கள்? அயர்ந்து உறங்குகின்றீர்கொல்? உறங்கன்மின்; உறங்குதல் உய்வற்றார்க்கே உரியது, ஓய்வு உலையா உழைப்புடையார்க்கே உரியது. உழைப்பவர் ஓய்வு கோடற்குரியர், ஓய்வுற்றவர் உறங்குதற் குரியர்; உறங்குவோர் மீட்டும் உழைத்தற்கு உடற்கும் உள்ளத்திற்கும் உரந்தருபவராவார். உங்களது உறக்கம் மீட்டும் உழைத்தல் வேண்டி உங்கட்கு ஊக்கம் செய்தற்கமைந்தது; அதற்குரிய போது இரவுப்போதே, ஆகவே, பகற்போது உழைப்புக் குரியதாகும். உழைப்புக்குரிய அப்பகற்போது உறங்குதற்குரிய தன்று; அதனால் பகற்போதில் நன்கு உழைமின்.

உலகம் விரிந்து கிடக்கின்றது; இதன்பால் உயரிய பயன் உளது; உழைப்பவர் அப்பயனை நுகர்தற்குரியர்; உலகையளித்த ஒருவன் உங்கட்கு உடம்பு நல்கியுளன்; அவ்வுடம்பினை உலகில் இயக்கி உறுபயன் பெறுதற்குரிய உறுகருவியாக உங்கட்கு, அவன் உள்ளத்தையும் உதவியுளன், உள்ளத்தால் உள்கியவழி உழைத்தற் குரிமையும், ஆற்றலும் உங்கள்பால் உள என்பது