பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

73


அவ்விடத்தை யான் கூறுதல் கூடாது" என்றது. என்றலும், அவற்றுட்டலைக் குஞ்சு முன்னின்று, "இவ் யாறு செல்லுமிடம் யாது, அது அவ் அறியாவுலகம்!" என்றது .இது உண்மை கொல்? அன்று. அவ் யாறு, மறுவில்மானவர் மலிந்த மூதூர் வெறிது சேறல் விழுப்பமதன்றென மலைபடுபொருளும் கான்படு செல்வமும் தலைமணந்துகொண்டு, பெருநகரடைந்து, கால்வழிச் சென்று, வயலிடைப் படர்ந்து, அதன்கண் விளையும் பைங்கூழ் வளர்த்து, வணிகர் மரக்கலம் அணிபெற மிதப்ப, மங்கையர் குடைந்து மாணலம் புனைய, புரிநூல் மார்பர் அருங்கடனாற்ற, மீனுண்குருகும், துண்டில் வேட்டுவரும், திண்டிமில்வாழ்நரும் செல்வம் மீக்கொளப் பரந்து சென்று, கோனோக்கி வாழுங் குடியனைத்தும் வானோக்கலின், அதற்கின்றியமையாப் பெருமழை பிறக்கும் பெருந்திரைப் புணரியைப் புணரும்! இப்புணரியோ அறியா உலகெனப்படுவது பகலின் பான்மையும் இரவின் எழிலும் புள்ளினத்துக் கொருபொலிவும் மாவினத்துக்கொருமாண்பும் வயங்கத் தருவனவாக, இவையனைத்தும் தந்த வொருவன், இவை செல்லிடமொன்றைச் செய்யாது விடுவனோ?

இது நிற்க, "அன்னாய் அறியாவுலகின் அழகினைக் கூறுவதால் ஆகும்ப்யன் யாதுகொல் அதனைப் பலகாலும் பாடிப் புகழ்தல் எற்றுக்கு?" என்று தொடங்கிய ஒரு குறும்புள். "தேனுாற்றெடுப்ப மணநாறும் பூம்பொழிலகத்தைவிட்டு நாம் வேறிடம் சேறல் என்னை? மென்றளிரும் நறுமலரும் மிகைபடச் செறிந்த கூடொன்றாக்கி, நாம் ஏன் என்றும் ஈண்டே வாழ்தல் கூடாது? வான்குயில்க ளிசைபாட வரிவண்டு பாண்மிழற்ற, மான்கன்று பயின்றுள்ள, பல்லுயிரும் பொலிவெய்த விளங்கும் இவ்விளமரக்காவினும் இனிதுகொல் அவ் அறியாவுலகம் ? ஆருயிரன்னாய்! நாம் வேறிடஞ்சேறல் வேண்டா. இதுபோது, சிந்தாமணி தெண்கடலமிர்தம் தில்லையானருளால் வந்தாலிகழப்படுமே முயற்சியின்றியே பெரும் பயன் எய்துதற்குரிய இடம் அதுவாயினும், யான் இவ்விடம் விட்டுப் பெயரேன். ஒழிக. இனி வேறுபுலஞ் சேறல். பைந்தாட் கோரையும், பசிய தளிர்நிறைந்த புதலும் மிக்க இவ் வடைகரையினும் இனிதுகொல் அவ் அறியாவுலகம் ஆகலின், அன்னாய்! இனிப்பாடுதலொழிக! பாடுதற்கு உளம் ஒருப்படுதலும் ஒழிக!" என்றது.