பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

75


ஆதலின், அன்னாய் வேறுபுலம் முன்னுதலை விட்டொழித்து, இப்புலம் பற்றிய இன்னிசையே மிழற்றுதி!’ என்றது.

பின்னர், அத்தாயாய செம்புள், இங்ஙனங்கூறிய தன் செல்வக்குஞ்சின் பெருஞ்சொற்களைக் கேட்டு, ஒருவாறு, உளத்தைத் திருத்தி, “செல்வங்காள் இனி நீவிர் விரும்பிய வண்ணமே வேறொரு பாட்டே பாடுவல். போற்றிக் கேண்மின் என்று ஒரு மெல்லிசை, பொருள் செறியப் பாடுதல் தொடங்கிற்று. அப்பொருள்:

“பரந்த உலகிடைத் தோன்றிய யாவும் தன் பொறிபுலன்களின் வழியே மனத்திற்குக் குன்றாவின்பமும், அச்சமறியா வியல்பும் நல்கத் தான் பெற்றுவாழ்ந்தமையும், அவ் வாழ்க்கையில் நாட்பல செல்ல, தனக்கு உள்ளிருந்தே, இஃது நின்னிடமன்று என வோர்பொருண்மொழி யெழுந்திசைத்தமையும்; அம்மொழி, பின் பலமுறையும் இசைப்பக் கேட்ட தான், ஒருகால் உவகையும், ஒருகால் வெறுப்பும், பலகாலும் கேட்டற் கொருப்படாது சேறலும் கொண்டிருந்தமையும்; இருக்கையில், தான் வாழுமிடமே மேதக்க இடமாவது, அதனை நீங்குதல் அறவே கூடாது என்னும் உவகையுணர்வு தோன்றினமையும்; பின்னர்த்தன் மனக்கினிய துணைப்பறவை போதந்து, காதல் செய்து களித்துக் கலந்தமையும்; அதுகாலை, அம்மொழிப் பொருள் பன்முறையும் எழுந்து, ஊன்கலந்து, உடல்கலந்து, உயிர்கலந்து, பின்னர் உணர்வுங் கலந்து ஒரோவோசையாய் உருவெங்குங் கலந்துநின்றமையும்; அக்கலப்பே, தன் துணைப்புள்ளிற்கும் நிகழ, இரண்டும் உளங்கலந்து இக்கான்யாற்றடைகரை யடைந்து, சிற்றிற் சமைத்துச் செவ்விய வாழ்க்கை நடாத்தி வந்தமையும் பிறவுமாம்.

இதனைக்கேட்ட பார்ப்பினுள் ஒன்று, "அற்றேல், அன்னாய்! நீ பண்டே யிருந்த இடம் யாண்டையது? அருகுளதாயின், யாம் அனைவரும் ஆண்டே படர்ந்து, இன்பந்துய்த்து இனிது வாழலாமே!” என்றது. எனவும், தாய்ப்புள் உளங்கலங்கி, ஆருயிர்ச் செல்வமே! அதனையெங்குளதென்பேன் அறியாவுலக மென்டேனோ அன்றி மிகமிகச் சேய்மையிலுள்ளதோர் விண்ணிடம் என்பேனோ யாது கூறுவேன்! யான் அறியேன்.