பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

செம்மொழிப் புதையல்


உண்மையில், உளநேர்ய் கோடல் உலகியல், 'ஏவவும் செய்கலான், தான்தேறான், அவ்வுயிர் போஒமளவும் ஓர் நோய்.' நிற்க, அவர் கூற்று வஞ்சனையின்பாற் படுவதோ, பொருளறியாமையின்பாற் படுவதோ, நீயே ஆராய்க. உலகியலும் உண்மையறிவு மிலரோடு உள்ளோர் உரையாடல் ஒருவாற்றானும் ஒல்லாதாகலின், யான் சென்று வருவல். வாழ்க! வாழ்க!! (மறைகின்றது.)

இங்ஙனம் அம் மடப்புறவங் கூறிய சொற்களாற் றன் உண்மையறிவு கலக்கங் கொண்ட குறும்புள் ஒரு வாறு தெளிதற்குள், அது கட்புலங் கடந்தது.

மறுபகல், வேனில் வெப்பமும், வெவ்விய காற்றும், இலவாக, தன் தன்மையிலோர் திரிபுண்மையைக் காட்டிற்று. நீனிற வானம் மானிறங் கொள்ளக் கொண்மூவினம் விண் முடின. கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வள்ளுறை சிதறித் தலைப்பெயல் பெய்ததாக, கரைபொரு திரங்கும் கான்யாறுவான் யாறொப்பப் பெருக்கிட்டோடி, குளிர்ப்பு மிகுதலும், உறைந்து பட, மாமேயல் மறந்தன; மந்தி கூர்ந்தன; பறவைபடிவன வீழ்ந்தன; கறவை கன்றுகோ ளொழிந்தன; குடாவடி உளியம் முதலியன பெருங்கல் விடரளையிற் செறிந்தன. ஆமா நல்லேறு சிலைத்தன; காற்றுற் றெறிதலால் மயிலினம் வீற்றுவிற் றோடின. இடம்பெற வமைந்த குடம்பைகள், பறவையும் பார்ப்பும் உறையுளின்றொழிய, நிலம்பட வீழ்ந்தன. வரனெனும் வைப்பில் உரங்கொண்ட அன்பு பூண்ட செம்புள்ளின் சேக்கைமட்டில் ஊறொன்றின்றி இனிதிருந்தது. அதனுழை யிருந்த குஞ்சுகள் இவ் வனைத்துங் காண்டலும், பெருவியப்புற்று, பகலோன் கரந்தனன்; பனி மிகுந்துளது என்கொல் எனும் எண்ணந் தலைக்கொண்டிருப்ப, ஒன்று, "பெருவானம் விரிகதி ரின்றியும், முகிற்குலம் பரவப்பெற்றும் உளது! தெண்ணீர்யாறு மண்ணீர்மையுற்று அசைவின்றி யுளது பகலவன் ஒளியே யின்றிப், பார்முற்றும் பசிய இருள் செறியப்பெற்றுளது என்னோ” என்றது.

மற்றும் ஒன்று:- நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும் பெருமை இவ்வுலகு உடைத்தன்றோ!

82