பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

89



இதனொடு வேறுபல காரியங்களும் இது செய்தல் வேண்டும். தேன் கூடு கட்டுதல், அதனை யழகு செயல் முதலிய எல்லாக் காரியங்களையும் இதுதான் செய்தல் வேண்டும். இது பற்றியேதான் இது தொழில்புரி தேனி என்றழைக்கப் பெறுதலும் காண்க. பாபம்! பாபம்!!

சிறுமி :- தொழில்புரிதேனி என்பது யாது? அண்ணா தாங்கள் "பாபம்! பாபம்!" என்று இதன்மாட்டு இரங்குவதேன்!

சிறுவன் :- ஏன் தெரியாது? நம் அத்தான் நேற்று நமக்குச் சொன்னதை மறந்துவிட்டாய் போலும்: தம்மைச் சிறிதும் ஒம்பாது பிறர்நலமே யோம்பி யவர்க்கே ஆட்பட்டுச் சிறு தொழில் புரியும் மக்களனைவரும் இரங்கற்பாலரே! அவர் வகையின் பாற்படுவதே இத்தேனியுமாகலின், யான் இதன் மாட்டும் மனமிரங்கல் வேண்டிற்று. இவ்வீக்களுக்கு அரச ஈ ஒன்றுளது. அதனை ஈயரசி யென்பதுவே பெரு வழக்கு. அது ஒரு சிறுதொழிலும், செய்யாது, எஞ்ஞான்றும் தொழிலீக்கள் அமைத்த கூட்டின்கண்ணே இருந்து, அவை கொணரும் தேனையுண்டலும், கொணர்ந்த ஈக்கட்கு வேறுபணி பணித்தலும், தான்பயந்த சிற்றிக்களைப் புரத்தலும், இவற்றோரன்ன பிறவுமே செய்து கொண்டுவரும். அதற்கு வேண்டும் சிறுபணிகளை, மருங்கிருந்து ஆர்க்கும் வண்டுகள் செய்யாநிற்கும். இவற்றிற்கு வேறாக வெற்றிக்கள் பலவுள. அவை ஒரு தொழிலும் செய்யாது வீணே அங்குமிங்குந் திரிந்துகொண்டிருப்பவை. ஏனையவை யாவும் இவ்வியைப்போன்று தேனிட்டிப் பிறவற்றிற்களித்தலோடு, அவற்றிற்காம் சிறுதொழிலைப் புரிபவையே யாகும். இக்கூறியவற்றை நம் அத்தான் அறிவாரேல் அவரால் நகைத்து அடங்குதல் முடியாது.

சிறுமி:- ஆனால், இச்செய்திகள் அத்தானுக்குத் தெரியாவோ?