பாவலரேறு பெருஞ்சித்திரனார்
117
ஒருமுறை ஒரு செயலில் இறங்கி அதனால் தொல்லைப் படுவது அறியாமை என்று கொண்டால், மறுமுறை அதே போலும் செயலில் இறங்கி இடர்ப்படுவது பேதைமை ஆகுமன்றோ? எனவே, ஒரு செயலில் முன்பின் ஆராயாமல் இறங்குவது எத்துணையளவு தவறானது என்று அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
இனி, தாழாது உழைத்தல் என்னுந் தலைப்பின்கண் இதனை ஏன் இவ்வளவு விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறினோம் என்றால், ஒருவர் தமக்குத் தெரியாத ஒரு செயலில் எத்துணைதாம் முயற்சி கெடாமல் உழைத்தாலும், அது தமக்குப் பொருந்தாத செயலாக இருப்பதால், அதில் பயன்பெறுவது கடினமானதாகவே இருக்கும் என்பதால் என்க. எனவே, ஒருவர் ஒரு செயலில் மிக எண்ணிப் பார்த்து இறங்க வேண்டும் என்பதும், அவ்வாறு இறங்கிய செயலில், கொஞ்சமும் பின்வாங்காது, தாழ்ச்சியுறாமல் உழைத்தல் வேண்டும் என்பதும் அதுவே முகாமையானதாகும் என்பதும் உணரப்பட வேண்டியனவாகும்.