பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

செயலும் செயல் திறனும்



இவ்வெண்ண வரிசையில் ஒரு செயலை எண்ணிப் பார்ப்போம். ஒருவர் ஒர் ஆற்றின் குறுக்காக ஒரு பாலத்தைக் கட்ட முயலுவதாக வைத்துக் கொள்வோம். அந்தச் செயலைத் தொடங்குமுன், பாலத்தை எவ்விடத்தில் கட்டுவது என்னும் இடத் தேர்வும், எப்படிக் கட்டுவது என்னும் திட்ட அமைப்பும், அவ்வாறு கட்டுவதற்கு எதை எதைப் பயன்படுத்த வேண்டும் என்னும் கருவிகள் தேவையும், அவற்றை வாங்குவதற்கும், கூலி ஆட்களை அமர்த்துவதற்கும் பொருள் தேவையும் நன்றாக எண்ணி வரையறுத்துக் கொள்வதும்,

அதன் பின், எக்காலத்தில் அப்பாலத்தின் வேலையைத் தொடங்க வேண்டும் என்று காலத்தை அறிந்து கொள்வதும்,

அவ்வேலையைத் தொடங்கி நடத்துங்கால் ஏற்படுகின்ற இடையூறுகளை - எடுத்துக்காட்டாக மழை வருவது, அதனால் ஆற்றில் வெள்ளம் வருவது போல்வனவற்றை எவ்வாறு தடுத்துக் கொள்வது என்று எண்ணுவதும் - படிப்படியாக வளர்ச்சியுறும் எச்சரிக்கைகளே.

மேலும், பாலம் கட்டத் தொடங்குவதற்குமுன், ஆற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்; அல்லது நீரின் வரவைத் தொலைவிலேயே தடுத்து நிறுத்த வேண்டும். அல்லது தற்காலிக அணையிட்டுத் தடுத்து நிறுத்துதல் வேண்டும் என்று எண்ணுவதும் வளர்நிலை எச்சரிக்கையே!

இவ்வாறு, ஒரு செயலில் ஈடுபடுவார், தாம் வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் என்ன விளைவு வரும் என்று மட்டுமே எண்ணாமல், என்னென்ன எதிர் விளைவுகள் வரும் என்று எண்ணிப்பார்ப்பதுவும், அவற்றை எவ்வாறு தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுவும் எச்சரிக்கையின் மிக வளர்ந்த உணர்வு நிலைகளாகும். மொத்தத்தில், இதற்குப் பின் இது, இதனால் இது, இதற்காக இது, இது போனால் இது, இது வந்தால் இது, இதுவே இது, என்னும் எண்ண முடிச்சுகளும் எச்சரிக்கை உணர்வின் ஆறு சூழ்திறங்கள் (சூத்திரங்கள்) ஆகும். ஒவ்வொரு செயலின் ஒவ்வொரு படிநிலையிலும் இவ்வாறு எண்ணக் கால்களும் ஊன்றி ஊன்றியே செயலானது நடைபெறுதல் வேண்டும். இவையே எச்சரிக்கை உணர்வுக்கு அடிப்படை உணர்வுகளாகும்.

"உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றி" என்பது எச்சரிக்கையின் வடிவம் தோய்ந்த அறிவுநிலையாகும். ஏற்கனவே நம் வினைக்கிடையில் வந்த இடர்ப்பாட்டை நீக்குதல் செய்து, மீண்டும் அதுபோல் ஓர் இடர்ப்பாடு வந்து விடாமல் காக்கின்ற தன்மை அது. 'வருமுன்னர் காத்தலும்' (435) அதுதான்.

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர்

(464)