பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

131



12. எச்சரிக்கை முன்னுரை, கண்காணிப்பு முடிவுரை

முடிவாக, முன்னெச்சரிக்கை உணர்வு ஒரு செயலுக்கு முன்னுரைபோல் அமையவேண்டுவது என்றால், கண்காணிப்பு உணர்வு, அச்செயலுக்கு முடிவுரைபோல் அமைய வேண்டுவது, முன்னெச்சரிக்கை உணர்வின்றிக் கண்காணிப்பு உணர்வு செயல்படுவதில் பயனில்லை. பின் விளைவு கருதித்தான் முன்னெச்சரிக்கையாக செயல்படவேண்டும். அதேபோல், விளைவு நீடித்து நிற்க வேண்டும் என்பதாகத்தான் கண்காணிப்பு உணர்வு செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

ஒரு பொருளை வாங்கும்போது எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். வாங்கிய பின் கண்காணிப்போடு இருத்தல் வேண்டும். முன்னெச்சரிக்கையுடன் வாங்கியும் கண்காணிப்பு இல்லையானால், ஒரு பொருளோ, செயலோ, கட்டாயம் தம் பயன்களில் குறைவுப்பட்டுவிடும். இரண்டு உணர்வுகளும் காத்தல் உணர்வின் இரண்டு முனைகள். ஒருணர்வு பொருளின் அல்லது செயலின் தரத்தை உறுதி செய்வது. மற்றவுணர்வு அவற்றின் தரத்தைக் குறையாமல் நிலைத்திருக்கச் செய்வது வருமுன் காத்தல், வருங்கால் காத்தல், வத்தபின் காத்தல் என்னும் மூன்று காத்தல் உண்ர்வுகளில் வருமுன் காத்தல் எச்சரிக்கை உணர்வையும், வருங்கால் காத்தல், வந்தபின் காத்தல் கண்காணிப்பு உணர்வையும் வெளிப்படுத்துவதாகும். எனவே செயலுக்கு எச்சரிக்கை உணர்வும், செயல் திறனுக்குக் கண்காணிப்பு உணர்வும் மிகமிகத் தேவையானவை. ஒரு செயலால் ஏற்படும் பயனைத் தொடர்ந்து நடைபெறச் செய்பவை. முன்னெச்சரிக்கை உணர்வு புறக்காப்பு. கண்காணிப்புணர்வு அகக் காப்பு. இனி, முன்னெச்சரிக்கை உணர்வுடன் ஒரு செயலைத் தொடங்குவதும், பின் எச்சரிக்கை உணர்வுடன் ஒரு செயலைக் கண்காணிப்புச் செய்வதும், தவறாமல் நிகழ்ந்தாலும், ஒரு செயல் தொடர்ந்து நடைபெறுகையில், நம் எச்சரிக்கை உணர்வையும், கண்காணிப்புணர்வையும் மீறி, ஒரு செயல், இடையில் ஏற்படுகின்ற இடையூறுகளால் தொய்ந்தோ, சிதைந்தோ, அழிந்தோ விடுவதுண்டு. எனவே, ஒரு செயலைத் தொடங்கிய பின், அது நடைபெறுங்கால் ஏற்படும் இடையூறுகளைக் கண்டு, மனந்தளராமையும் ஒருவர்க்கு வேண்டும். அது பற்றிச் சிறிது விரிவாகப் பார்ப்போம்.