பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

செயலும் செயல் திறனும்



இரண்டாம் பதிப்பு
பதிப்புரை

மாந்தரில் பலர், தாங்கள் எப்படிப்பட்ட செயல்களைச் செய்ய வேண்டும், எவ்வெவ்வாறு செய்ய வேண்டும் என்பன போன்றவற்றைச் சிந்திக்காமல் ஆழ எண்ணாமல் - தாங்கள் விரும்புகின்ற செயல்களில் மனம் போனபடி எல்லாம் ஈடுபட்டு அல்லல் உறுகின்ற அவலக் காட்சிகளைக் கண்ணுற்று கவலையுற்று பாவலரேறு ஐயா அவர்கள் எதிர்காலத் தலைமுறையினரான இளையோர்க்கு அறிவு கொளுத்தும் வகையில் சிறார் இதழான தமிழ்ச்சிட்டில் ஆசிரியவுரைக் கட்டுரைகளாக 56 தொடர்களாக 1980 முதல் 1987 வரை எழுதி வந்தார்.

இக்கட்டுரைகளின் தொகுப்பு முதல்பதிப்பாக தி.பி2019(1988 இல் நூல் வடிவம் பெற்று வெளிவந்தது. படிகள் தீர்ந்த நிலையில் மறுஅச்சாக காலத்தாழ்த்ததுடன் ஏற்பட்டு இப்போது இப்பதிப்பு வெளிவருகிறது.

இப்பனுவலுக்கு ஆசிரியர் அவர்கள் தந்துள்ள முன்னுரையும் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துயதமிழ் அகரமுதலிகள் துறைத் தலைவரான சொல்லாய்வறிஞர் அருளியார் அவர்கள் உரைத்துள்ள முன்மொழிவுரையும் இந்நூலின் சிறப்புகளைப் பறைசாற்றும்.

ஐயா அவர்கள் தமிழியக் கொள்கைகளை மேற்கொண்டு முழுமூச்சாக அவற்றுக்கு பாடுபட்டவர் ஆவார். இந்நூல் தமிழ் மக்களுக்கு மட்டுமே பயன்படக் கூடிய வகையில் இல்லாமல் உலகின் அனைத்து மக்களுக்கும் பயன்படக் கூடிய வகையில் விளங்கும் தன்மையுடையதை எவரும் மறுக்கவியலாது.

ஐயா அவர்களின் நாற்பாண் ஆண்டுகளுக்கு மேலான கடும் உழைப்பில் விளைந்த பல படைப்புகள் இன்னும் நூலாக வரவேண்டியிருக்கிறது. இருப்பினும் இந்நூலின் தேவை உணர்ந்து மறுபதிப்பு வெளியிடப்படுகிறது. தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறுமாக!

இந்நூலுக்கு கணினி எழுத்தாக்கம் செய்த திரு. ச. அழகுஒளி, குட்டி என்கிற இளமுருகன், மெய்ப்பு திருத்திய தென்மொழி குழந்தை ஈகவரசன் ஆகியோர்க்குப் பதிப்பகத்தின் நன்றிகள் உரிதாகுக.