பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

13



முன்மொழிவுரை

ஐம்பத்தாறு தொடர்களாக - ஏழாண்டையும் கடந்த ஒரு நீளிய காலப் பரப்பினிடையில் - தமிழகச் சிறார்க்கென மாதம் பாடியாகப் பறந்துலவித் திரியும் தமிழ்ச்சிட்டு இதழின் ஆசிரியவுரைப் பகுதியில் பதிப்பேறிவந்த செயலும் செயல்திறனும் என்னும் கட்டுரை தொடர் இப்பொழுது இந்நூல் வழியாகத் தொடரியாக்கப்பெற்று நம் கைகளில் கமழ்கின்றது.

தம் உள்ள மன அறிவு நிலைகளை நலத்தோடும் வளத்தோடும் வலிவோடும் காத்து வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் நல்லுணர்வாளர் ஒவ்வொருவரும் இதனை வாழ்வியல் வழிகாட்டி நூலாகக் கொண்டு இதனைக் கடைப்பிடித்து வந்து உருப்பட்டு உயரலாம்.

அதற்கெனவே மிக மிக உழைப்பெடுத்து நீளவும் அகலவுமாக ஆழவும் ஓங்கவுமாகத் தம் எண்ணத்தைச் செலுத்திச் செப்பமுற்ற நிலையில், இதற்குரிய பாகுபாடுகளை நன்கு திருத்தமுற வகுத்துக் கொண்டு, அருமையான அமைப்பொழுங்கில் இக்கட்டுரையைக் கட்டமைத்திருக்கின்றார் ஆசிரியர்.

இக்காலத்து இளையோர்களில் பலரும் பெரியோர்களில் சிலரும் செயல் பற்றியோ அல்லது செயல்திறன் பற்றியோ, அடிப்படைத் தெளிவேயில்லாது அலமரலுற்று உழன்றவாறே தாறுமாறாய் இடறிவீழ்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் அவல நிலைகளைக் கண்டு அவற்றை அகங்கொண்டு அன்னார்க்கென மிக்க கழிவிரக்கங் கொண்டு நம் பெருமதிப்புகுரிய ஐயா பாவலரேறு அவர்கள் இந்நூலை மிகமிக அருமையாக யாத்தளித்துள்ளார்கள்.

கட்டுரைத் தொடர்களைத் தொடர்ந்து படித்துப் பார்க்கையில் சேம்சு ஆலனின் வெளிப்பாட்டு முறைப்பாங்கு பல்வேறு இடங்களில் நிழலாடுகின்றது. செய்திகள் தாம் அவ்வவ்விடங்களில் வேறுவேறாக வெளிப்பட்டிருக்கின்றனவே தவிர இவ்விருவகை வெளிப்பாடு களினுள்ளும் இயல்பெழும் கனற்சியும் தணப்பும் பல்லிடங்களில் ஒரேவகை அலையொழுங்கினவாகவே படுகின்றன.

நூலாசிரியரின் முப்பதாண்டிற்கும் மேற்பட்டு நீண்டு வரும் திருக்குறள் தோய்வும் ஆய்வும் செயலும் செயல் திறனும் என்னும் தலைப்பின் கீழ் இவ்வளவு திட்ட நுட்பஞ் செறிந்த ஒட்டநூலை வரையும் ஆற்றலைத் தந்துள்ளமை நூலின் அமைப்பாக்கத்தினுள் துலங்கத் தெரிகின்றது.