பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

செயலும் செயல் திறனும்



நாம் பருப்பொருளாகிய நம் உடலை இயக்குவது நமக்குத் தெரிகிறது; முடிகிறது. ஆனால் நம் உள்ளம், நாம் கண்களால் காண முடியாத பொருளாகையால் அதை இயக்குவதை அல்லது அது நம்மால் இயங்குவதை அறிய முடிவதில்லை. நம்மால் அறிய முடியாமலேயே அது நம்மால் இயக்க முறுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும். அதற்கு, உடலைப் பயிற்றுவிப்பதைப் போலவே, உள்ளத்தையும் பயிற்சியால் இயக்க முடியும் என்று அவர்கள் அறியாமல் இருப்பதே காரணமாகும்.

3. உடலின் இரண்டு இயக்கங்கள்

நம் உடல் தானாகவும் இயங்கும்; நம்மாலும் இயக்கப்படும் அவற்றுக்கு விரும்பாச் செயல் (அநிச்சைச் செயல் விருப்பச் செயல் இச்சைச் செயல் என்று பொருள்.

நாம் விரும்பாலேயே சில உடல் செயல்கள் தாமாகவே நடைபெறுகின்ஹன. பார்க்க விரும்பாமலேயே கண் பார்க்கிறது; கேட்க விரும்பாமலேயே காது கேட்கிறது; நாம் மூச்சுக் காற்றை உள்ளிழுக்கவும், வெளியே விடவும் செய்யாமலேயே, வெளிக்காற்று தானாகவே மூக்குத் தொளைகளின் வழியாக உள்ளே போகவும், வெளியே வரவுமான, உயிர்ப்பு வேலை நடந்து கொண்டிருக்கிறது; நம் வாயில் எப்பொழுதும் ஊறிக்கொண்டிருக்கும் உமிழ்நீர் நாம் விரும்பாமலேயே விழுங்கப்படுகிறது. இனி, நாம் விரும்பாமலேயே நம் உடலின் உள்ளுறுப்புகள் அவையவைபாட்டிற்கு இயங்கிக் கொண்டிருக்கின்றன; நெஞ்சாங்குலைத் துடிப்பு, செரிமான வேலைகள், குடல் இயக்கங்கள், அரத்த ஓட்டம் முதலிய நூற்றுக்கணக்கான உடலின் உள்ளுறுப்புப் பணிகள் எப்பொழுதும், நாம் விழித்திருக்கும் பொழுதும், துங்கும்பொழுதும், இறுதிவரை நடந்து கொண்டே இருக்கின்றன. இவை யாவும் விரும்பாச் செயல்கள் (அநிச்சைச் செயல்கள்) என்பதை நாம் அறிதல் வேண்டும்.

இனி, இவை போலவே விருப்ப இச்சைச் செயல்களும் நம்மில் நடைபெறுகின்றன. நாம் விரும்பி ஒரு பொருளைப் பார்க்கிறோம்; விரும்பி ஓர் இசையைக் கேட்கிறோம், விரும்பி ஒரு பொருளை உண்கிறோம்; விரும்பி ஓர் இடம் நோக்கி நம் கால்களை நடக்க விடுகிறோம்; விரும்பி நம் கைகளால் ஒரு வேலையைச் செய்கிறோம்.

இவ்வாறு, நம் உடல் நாம் விரும்பாமலும் இயங்குகிறது; நம் விருப்பத்துக்கும் இயங்குகிறது. இவ்விரண்டு இயக்கங்களும் நமக்குத் தெளிவாகத் தெரிகின்றன. இவற்றை நாம் உணர்கிறோம்; அறிகிறோம். இங்கு, விரும்பாமல் நடக்கும் இயக்கங்களையே உணர்வதாக நாம் கூறுகிறோம். விரும்பி நடைபெறும் இயக்கங்களையே அறிவதாக நாம் குறிப்பிடுகிறோம்.