பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

171



எனவே, பொருல் முடையால், தட்டுப்பாட்டால், ஓர் அரிய செயலில் ஈடுபட்டிருப்பவர், அப்பொருள் நிலையைச் சரி செய்து கொண்டு, மேலும் அதில் தம்மை ஊக்கமுடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, அவ்வருஞ் செயல் செய்வதிலிருந்து பின்வாங்கிவிடக் கூடாது என்பதைச் செயல் திறமுடையவர்கள் உறுதியாகக் கொள்க.

5. காலப் பிறழ்ச்சி

அடுத்து, ஒரு செயலில் ஈடுபட்டவர்கள், தாங்கள் செய்யும் செயலைப் பொருத்தமில்லாத ஒரு காலத்தில் தொடங்கிவிடலாம். அல்லது அச்செயலைச் செய்து கொண்டிருக்கும் பொழுது, அப்படி ஒரு காலம் வந்து அவர்களின் செயலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அந்த நிலையிலும் கூட அவர்கள் மனச்சோர்வு கொள்ளத் தேவையில்லை. அடுத்துவரும் காலம் அவர்களுக்கு ஒரு பொருத்தமான காலமாக இருக்கலாம். அதை எதிர்பார்த்து, அவர்கள் தம் முயற்சியில் தளர்ந்துவிட வேண்டுவதில்லை. அதற்காக தாம் சரியென்று கருதி மேற்கொண்ட செயலிலிருந்து விலகி விட வேண்டியதில்லை.

இவ்வுலகில் பலபேர் ஒரு செயலில் தொடர்ந்து வெற்றி கிடைக்கும் வரை ஈடுபடுவதை நாம் பார்ப்பது அரிது. ஒரு காலத்தில் ஒருவர் ஒரு தொழிலைச் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லுவார். ஆனால் சிறிது காலம் சென்று மீண்டும் அவரைப் பார்க்கையில் தாம் வேறு வகையான ஒரு செயலைச் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லுவார். அத்துடன் நில்லாது, முன்னர் தாம் செய்து கொண்டிருந்த தொழிலைக் கைவிட்டுப் பிறிதொரு தொழிலை மேற்கொண்டதற்கான காரணத்தையும் பலவாறு விளக்கிச் சொல்லுவார். இது ஒரு வகையில் சரியாகவும் இருக்கலாம். ஆனால், மீண்டும் சில காலம் சென்று அவரைப் பார்க்கையில், இரண்டாவதாகச் செய்து கொண்டிருந்த தொழிலையும் அல்லது செயலையும் கைவிட்டு விட்டு, அக்கால் வேறு ஒரு செயலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்லுவார். இந்நிலைக்கும் ஒரு காரணத்தைப் புதிதாகச் சொல்லுவார். இவர் தம் வாழ்க்கை முழுவதும் இப்படியேதான் ஒன்றிலும் நிலை பெறாமல், ஆடு இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சம் தழையைக் கடித்துத் தின்பது போல், அலைவு மனம் கொண்டவராய், அலைந்து திரிவர். இந்நிலையைத் தவிர்த்துக் கொண்டால், காலப் பிறழ்ச்சியியால் வரும் இடர்ப்பாடுகளை இவர்கள் விலக்கிக் கொள்ள இயலும்.

6. இடம் பொருந்தாமை

செயலுக்குப் புறத்தாக்கமாக வருகின்ற இன்னொரு நிலை இடம் பொருந்தாமை நாம் ஒரு செயலை அமைத்துக் கொண்ட இடம் ஒன்றாக இருக்கும். ஆனால் அவ்விடம் அச்செயலுக்கு பொருந்துவதாய்