பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

177



பொருள் வருவாயுடன் செயல் விளைவையும் கருதுபவர்கள், செயல் விளைவுக் கணக்கீட்டின்படி கணித்துப் பொருள் கொள்கை ஒப்பீட்டுக் கணிப்பின்படி, ஊதியம், இழப்புக் கணக்கிடலாம்.

மேற்கூறிய முதல் சமன்பாட்டில் உள்ள, வருவாயில் கழிபட வேண்டிய முதல் என்பதில், கருவித் தேய்வு, எச்சரிக்கை வைப்பு முதலியவற்றையும், அரரவர் செயல் நிலைகளுக்கு ஏற்ப, சேர்த்துக் கணக்கிடலாம்.

5. இழப்பு கண்டு சோர்வுறாமை

இக்கணக்கீடுகளுக்குப் பின்னர் நாம் ஈடுபட்ட செயலில் உறுதியாக இழப்புதான் ஏற்பட்டது எனில், அதைக் கண்டும் உடனே சோர்வடைந்து விடுதல் வேண்டியதில்லை. மேலும் முயற்சி செய்வது நல்லது; இனி, மேன்மேலும் முயற்சி செய்வது நல்லது.

ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார் (593)

என்பது பேராசானின் பேருரை.

'ஏற்பட்ட இழப்பு எதனால் ஏற்பட்டது. அஃது ஏற்படாமல் காக்கும் வழியென்ன, அவ்விழப்பால், நாம் கொண்ட முதல் எவ்வாறு ஊறடைந்தது முதலியவற்றை யெல்லாம் நன்கு ஆய்ந்து சீர்தூக்கி, மேலும் இழப்பு நேராவண்ணம் நாம் விரும்பி மேற்கொண்ட நமக்குத் தெரிந்த வினையை மேன்மேலும் ஊக்கமாகச் செய்ய வேண்டும் என்றெண்ணிச் செய்வதே நாம் வெற்றியடையும் வழி என்று திண்ணமாக எண்ணிக் கொள்ளுதல் வேண்டும்.

இனி, எல்லா நிலைகளிலும், மிக எச்சரிக்கையாக இருந்து, வேறு புறக் காரணங்களாலோ, இயற்கை அழிவுகளாலோ, ஆளழிவுகளாலோ ஒரு பெரும் இழப்புக்குள்ளாகிய நிலையிலும் கூட, நாம் வருந்த வேண்டியதில்லை. யானை ஒன்று அம்பினது தைப்புக்குள்ளாகிய நிலையிலும் தன் ஊக்கத்தை இழவாதது போல், நாமும் மன, உடல் சோர்வுகளால் ஒரு வினையைக் கைவிட வேண்டியதில்லை.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின்
பட்டுப்பா டூன்றும் களிறு. (597)

என்னும் ஊக்கவுரையை என்றும் உயிருரையாகக் கருது.

இனி, புதிய ஒரு வினையை மேற்கொள்வதினும் பல இழப்புகளைக் கண்ட பழைய வினையை மேற்கொள்வதே சிறந்தது.

நம் முதலீட்டை முழுவதும் இழந்து வறுமையுற்றாலும் அதற்காகவும் நாம் வருந்தி நின்று, நம் முயற்சியைக் கைவிடுதல் நன்றன்று.