பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்



7. எதிர்ச் செயலே துன்பம்

இனி, ஒரு செயலுக்கு எதிராக வரும் தாக்கச் செயலே துன்பமாகத் தோன்றுகிறது என்னும் உண்மை தெரியப்பெற்ற பின், இதையறிந்த அறிவுள்ளவர்கள் இத்துன்ப நிலைகளை உள்ளத்தளவிலேயே தவிர்த்துக் கொள்ளும் உணர்வுப் பாடறிந்தவர்க ளாதலின், இத்துன்பங்கள் இவர்களிடத்தும் தோன்றாவாம் என்க.

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். (622)

என்பதில் இக்கருத்தைப் பேராசான் புலப்படுத்துவார். இனி இதனினும் மேலாக, இத்தகையவர்கள் இத்துன்பத்திற்கே துன்பம் விளைவிப்பார்கள் என்பார் இவர்.

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர். (623)

இக்கருத்தையொட்டி இவர் திருக்குறளுள் எடுத்துரைக்கும் பல கருத்துகள், இன்னும் விரிவாகவும், விளக்கமாகவும் இது தொடர்பாக உண்மைகளை நமக்குத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.

உடல் என்பது செயல் கருவி என்பதையும், எனவே செயல்களுக்கிடையில் வரும் துன்பங்கள் என்னும் எதிர் நிலைச் செயல்களால் உடல் ஒவ்வொரு நிலையிலும் தாக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும் என்பார் திருவள்ளுவர்.

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல். (627)

8. துன்பத்தை வரவேற்க வேண்டும்

எனவே, துன்பத்தை நாம் வரவேற்கவே வேண்டும். அத்துடன் மட்டும் அமையாமல் இன்பத்தை எதிர்பார்க்கவும் கூடாது என்பார் அவர். ஏனெனில் துன்பம்தான் உயிர்களுக்கு இயற்கையேயன்றி இன்பம் அன்று. துன்பங்களுக்கிடையில் தான் இன்பம் வரும் என்று எண்ண வேண்டுமேயன்றி, இன்பங்களுக்கிடையில் துன்பம் என்று எதிர்நிலையாக இயற்கைக்கு மாறாக எண்ணிக் கொண்டு, இடர்ப்படலாகாது என்பார் உலகியற்கைப் பேராசிரியராகிய திருவள்ளுவர்.

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன் (628)

எனவே,