பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

189



அந்நேர்மையில் நெகிழ்ச்சி காட்டுகிறார். பிறகு தம் செயல் வலுப்பெற வேண்டும் என்பதற்காகப் பல தவறான வழிகளைக் கடைப்பிடிக்கிறார். இன்னும் சிலர் குறைந்த முயற்சியில் மிகுதியாகப் பணம் தொகுக்கப்பட வேண்டும் என்னும் பேராசையால், செயலின் தொடக்கத்திலிருந்தே நேர்மையில்லாத வழிகளையும் குறுக்கு வழிகளையும் பின்பற்றுவது பொதுவான உலகியலாகவே மாறி வளர்கிறது. செயலில் நேர்மையைக் கடைப்பிடிப்பது, அச்செயலின் நிலைப்பாட்டுக்கு நல்லதையே பயக்கும் என்பதை அனைவரும் அறிதல் வேண்டும். பிறரை வஞ்சித்து, ஏமாற்றித் திருடி, அல்லது பொய்க்கூறிப் புரட்டல் செய்து, ஈட்டுகின்ற பொருள், என்றேனும் ஒருநாள் அத்தீச்செயல்கள் வெளிப்படும்பொழுது, ஒருசேரப் போய்விடும் என்னும் உலகப் பொதுவுண்மையை நாம் உணர்தல் வேண்டும்.

அழக்கொண்ட எல்லாம் அழப்போம்; இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. (659)

என்னும் அறவுரை, சாவிப்புப் (சாவம்) போலக் கூறப்பெற்றதன்று. உலகியலடிப்படையில் கூறப்பெற்ற பொதுவுண்மையே ஆகும்.

தொழிலியலில், ஒருவர் முற்கூறிய தவறான வழிகளைக் கையாண்டு மிகுபொருள் திரட்டுவதாக வைத்துக் கொள்வோம். இதனால் தாக்குண்டவர் பலராக இருத்தல் வேண்டும்; எடுத்துக்காட்டாக, வாணிக நிலையில் ஒருவர் தாம் கொண்ட கொள்முதலீட்டுக்கு மேல் ஒன்றுக்குப் பத்தாக ஊதியம் வருமாறு கூறிப் பிறர்க்கு விலைபோக்குவதாக வைத்துக் கொள்வோம். அவ்வாறு செய்பவர் அந்த நிலையில் அவ்வப்பொழுது தம்மை மறைத்துக் கொண்டு செயல்படலாம். ஆனால், அரசு அதிகாரிகள் ஒருநாள் அவரை அணுகவும், அவர் தவறான முயற்சிகளைத் தெரிந்து கொள்ளவும் முற்படும்பொழுது, அவர் இதுவரை தவறாக ஈட்டி வைத்த பொருள் பறிமுதல் செய்யப்படலாம். அல்லது தாம் செய்த குற்றங்களுக்குத் தண்டமாகவோ, வழக்கு நடத்தவோ தாம் ஈட்டியவற்றுள் மிகுபொருளைச் செலவிட வேண்டியிருக்கலாம். நடைமுறைகளாலேயே ஊறுபாடு வந்தெய்துவதும் இயல்பானதே யாகும்.

3. துன்பம் வரும்பொழுதே நேர்மை இழக்கின்றோம்

இந்நிலையில், பொதுவான, தங்களுக்கு இயல்பான தாழ்ந்த மனநிலைகளுடன் செயல்படுபவர்களைத் தவிர்த்து, (ஏனெனில் அவர்கள் தாமே தம்மைத் திருத்திக் கொண்டால் தான் உண்டு) செயல்களுக்கிடையில் வரும் துன்பங்களைத் தாளமுடியாமல், தொடக்கத்தில் நேர்மையாக நடந்து கொண்டு, இடையில் அதே நேர்மையுடன் இருக்கவியலாமல், தம் நிலைகளினின்று விலகி, நேர்மையில்லாத வழிகளைக் கடைப்பிடிக்க முற்படுபவர்களுக்குச் சில