பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

193



ஒரு செயலில் கேடு வருவதும் ஆக்கம் வருவதும் இயல்பு. அவை எதனால் வருகின்றன? கேடு வந்தால் ஏன் வந்தது என்று ஆராய்ந்து, அதைத் தவிர்க்கும் சரியான வழியை நாம் கடைப்பிடித்தல் வேண்டும். செயலில் ஏற்படும் குற்றங்களுக்காகவும் மனத்தை - நெஞ்சத்தை ஊறுப்படுத்திக் கொள்ளக் கூடாது. தவறான வழிகளைக் கடைப்பிடிப்பதன் வழி உள்ளம் - நெஞ்சம் ஊறுபடுகிறது; பின்னர் அது தொடர்ந்து அதுபோல் ஊறுபாடான, குற்றமான வழிகளிலேயே செல்லத் தொடங்கி விடுகிறது. இதைத் திருவள்ளுவப் பேராசான் கடிகிறார்.

கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. (115)

என்கிறார்.

8. நல்லதே வருவதானாலும் தவறானவற்றைத் தவிர்க்க

நல்லதையே தந்தாலும் கூட, நடுநிலைமையில்லாமல் வருகின்ற ஊதியத்தை - ஆக்கத்தை அவ்வாறு எண்ணத் தோன்றிய அப்பொழுதே தவிர்த்து விட வேண்டும் என்பது அவர் கோட்பாடு.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல் (113)

வறுமைத் துன்பம் எய்தினாலும் இழிவான செயல்களைச் செய்து இன்பத்தைத் தேட வேண்டாம். அப்படித் தேடுபவர்கள் முரட்டுத் துணிவுடையவர்கள்; பழிக்கு அஞ்சாதவர்கள்; உள்ளம் நடுங்காதவர்கள்; நடுநிலையில்லாதவர்கள் தெளிவில்லாதவர்கள், அறிவில்லாதவர்கள் என்று கடிகிறார் பெருந்தகை.

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்குற்ற காட்சி யவர். (654)

தங்களுக்கு இல்லையே; பிறருக்கு இருக்கிறதே என்ற பொறாமையும் ஆசையும் கலந்த உணர்வோடு எந்தத் தவறான செயலிலும் ஈடுபட்டு விடக்கூடாது அப்படி ஈடுபடுபவர்கள் இழிந்தவர்கள்: மூடர்கள்; புலனுணர்வுக்கு அடிமைப் பட்டவர்கள்.

இலமென்று வெஃகுதல் செய்யார்; புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர் (174)

இனி இப்பொழுது வந்து கொண்டிருக்கின்ற பயன் அல்லது நன்மை அல்லது ஊதியம் இவற்றைவிட, இன்னமும் மேற்கொண்டு வருகின்ற கூடுதல் பயனையும்,நன்மையையும் ஊதியத்தையும் எண்ணிப் பார்த்துக்