பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

செயலும் செயல் திறனும்



உலகியலும் முற்ற உணர்ந்த மூதறிஞர் என்க.

10. நல்ல குடிமரபு உடையவர் குற்றச் செயல்கள் செய்யார்

இனி, மேற்கூறப்பெற்ற உண்மையின் அடிப்படையில் இன்னொரு மேல்விளைவையும் குறிப்பர், அப்பேரறிஞப் பெருந்தகை.

நல்ல மரபு வழிப்பட்ட குடிமைச் சிறப்புடையவர்கள், சில நிலைகளில், தம் குடிப்பெருமை முன்னோர் சிறப்பு இவற்றையெல்லாம் எண்ணிப்பாராமல், சூழ்ச்சியாலும், ஏமாற்றாலும் பிறரை வஞ்சித்துத் தீமையான வழிகளில் நலமும் வளமும் தேடிக் கொள்வார்கள். அக்கால், இவர்கள் செய்யும் தவறுகளால், இவர்களின் முன்னோர் பெருமையும் அஃதாவது இவர்களின் மரபு வழிப்பட்ட குடிப்பெயரும் தாழ்ச்சியுறும். எனவே, தங்களுக்கு மட்டுமன்றித் தங்கள் முன்னோர்க்கும் இழுக்கு வரக்கூடாது என்று எண்ணுபவர்கள் பிறரை ஏமாற்றித் தீயவழிகளில் பொருளைத் தேடமாட்டார்கள் என்று கூறுவர், மானவழி கூறும் அவ் வினைநலப் புரவலர்.

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார் (956)

எனவே, செயல்திறம் கொண்டவர்கள், எந்த நிலையிலும், தவறான வழிகளைக் கடைப்பிடித்துத் தம் செயல்களையோ, வாழ்வையோ நலப்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும். ஒரு செயலைச் செய்வதுமட்டுமன்றி, அச்செயலையும் திறம்படச் செய்யும் செயல்திறவோர்க்கு இதுவும் கவனிக்கப்பட வேண்டும் என்பதால், இதனை இவ்வளவு விரிவாகவும் விளக்கமாகவும் கூற வேண்டி வந்தது.