பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

செயலும் செயல் திறனும்



இனி, அடுத்து, நாம கவனிக்க வேண்டுவது, நாம் முதலில் தொடங்கிய வினை முழுவதுமாகச் செய்யப்பெற்று வந்தாலும், நாம் புதிதாகத் தொடங்கவிருக்கும் வினை முன்னதற்குத் தொடர்புடையதா என்று கருதியும் ஆராய்ந்தும் பார்ப்பது, அவ்வாறு பார்த்துத் தெளிந்த பின்னர், நாம் துணையாகத் தொடங்கவிருக்கும் புதிய செயலுக்குப் போதுமான வலிவும், சூழலும், காலமும், முதல் செயலை ஊறுபடுத்திக் கொள்ளாத அளவில் அமைந்துள்ளனவா என்று கவனிக்க வேண்டுவது. அஃதாவது, நம் முதற்பணிக்கு ஈடுபடுத்திய பொருள் போக, புதிதாகத் தொடங்கவிருக்கும் துணைப் பணிக்கு அல்லது வினைக்குப் போதுமான பொருளியல் வலிவும் ஆள்துணையும் நமக்கு இருக்கின்றனவா என்று கருதிப்பார்ப்பது. அவ்வாறில்லாமல், முதல் செயலில் உள்ள பொருளியலைப் பகிர்ந்தளிக்க வேண்டி வரும் என்றால், அந்நிலைப்பால், முதல் செயலும் இரண்டாவது செயலும் கெடுவதற்கு வாய்ப்பு உண்டன்றோ? இதுவே வலி கருதுவதாகும்.

இனி, முதலில் தொடங்கிய செயல் அல்லது தொழில் ஓர் இடத்தில் இருந்து கண்காணிக்கப் பெறவும், பின்னர் தொடங்க விருக்கும் தொழில் பிறிதோர் இடத்திலிருந்து மேலாண்மை செய்யப் பெறவும் இருப்பது, நம் முழு ஈடுபாட்டுக்குத் தடையாக அமைந்து விடுவதாகும். இது போன்ற நிலைகளைக் கருதிப் பார்ப்பதே சூழல் கருதுவதாகும்.

இனி, மூன்றாவதாகக் காலம் கருதுவதென்பது, நாம் முன் தொடங்கிய செயல் அல்லது வினை பகலில் செய்வதாக இருக்கையில், இரண்டாவதாகத் தொடங்கும் துணைவினை, இரவில் செய்யப் பெறுவதாக இருக்குமானால், அதுவும் நம் இயக்கத்துக்குத் தடையாக இருக்கும் என்று கருதுவதும் அதுபோல் பிறவும் ஆகும் என்க.

7. அமைந்து ஆங்கு ஒழுகுதல்

மேற்கூறிய இரண்டாம் நிலையிலும் மூன்றாம் நிலையிலும் நாம் ஈடுபாடு கொள்ளும்பொழுது, நம் ஆர்வம் ஈடுபாடு, உடல் நலம் முதலியவையெல்லாம் தொடக்கத்தில் நன்றாகவே இருந்தாலும், போகப்போகப் படிப்படியாக ஒவ்வொன்றாகக் குறைவுப்பட்டு, இறுதியில் அனைத்தும் ஒரு நிலையில் வலுவற்றதாகப் போய்விடலாம் அன்றோ! அக்கால் உள்ளதும் கெட்டதடா நொள்ளைக்கண்ணா? என்றாகிவிடும் எனவேதான்,

அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும். (474)

என்பார் திருவள்ளுவப் பேராசான். இக்குறள்மணி, பொருட்பாலில் அரசியலில், வலியறிதல் அதிகார்த்துள் சொல்லப் பெற்றதால்,