பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

செயலும் செயல் திறனும்



அவர்கள் நம்மேல் நம்பிக்கை வைக்கும் அளவிற்கு, நாமும் அவர்கள் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்கள் நம் செயல்களின் மேல் அதிக அக்கறையும் ஆர்வமும் கொண்டு உழைக்க முன் வருவார்களானால் நாமும் அவர்களின் அக்கறைக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ற மதிப்பும், பெருமையும், வெகுமதியும் தந்து அவர்களைப் போற்றிக் கொள்ளுதல் வேண்டும். நாம் செய்யும் செயல்களில், அக்கறையும் ஆர்வமும் ஊக்கமும் கொள்ளாத பணியாளர்களைப் பணிக்கு அமர்த்திக் கொண்டு, நம்மையும் வருத்திக் கொண்டு, நாம் செய்யும் செயலுக்கும் ஊறுவிளைவித்து விடுதல் கூடாது.

பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தொடக்கத்திலேயே மிகு கவனம் செலுத்துதல் நல்லது.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்.

(510)

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர்.

(514)

என்னும் திருக்குறள் கூற்றுகள் ஒவ்வொரு பணியாளரையும் தேர்வதற்கு முன் நாம் மனத்தில் இருத்திக் கொள்ளக் கூடிய எச்சரிக்கைக் கருத்துகளாகும்.

"நன்றாக ஆராய்ந்து பாராமல் ஒருவரை நாம் பணியாளராக வைத்துக் கொள்ளலாம் என்று தெளிவுறுதலும், அவ்வாறு தெளிந்து தேர்ந்து கொண்டவர்மேல் நாம் அடிக்கடி ஐயப்பட்டுக் கொள்ளுதலும், இடைவிடாத துன்பத்தையே நமக்குத் தருவதாகும்” என்பதும்,

நாம் ஒருவரை அறிவு, அன்பு, பண்பு, வினைத்திறம், நடைமுறை, ஈடுபாடு, பொறுப்பு முதலிய அனைத்து நிலைகளாலும் தகுதியானவர் என்று பணிக்கு அல்லது வினைக்குத் தேர்ந்தெடுத்தாலும், அவரை வினைக்கு அமர்த்திய பின் தம் தகுதி நிலைக்கூறுகளில் நாம் எதிர்பார்த்த அல்லது முன்னிருந்த தன்மையில் வேறாக இயங்குபவர்கள் பலர் ஆக இவ்வுலகில் உள்ளனர்; ஆகையால் அவரும் மாறி போகலாம் என்பதும், தாம் எண்ணி ஆராய்ந்து பார்க்கத் தகுந்தன.

9. பணியாளர் குணங்கள்

ஒருவரை நம் வினைக்கு அல்லது தொழிலுக்கு பணியாளராக அமர்த்துதற்கு முன்னர் அவரைப் பற்றிய கீழ்க்காணும் குணநலன்களில் மிகு கவனம் செலுத்துதல் வேண்டும்.