பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

செயலும் செயல் திறனும்



அது செய்யப்படுமுன் அதுபற்றிச் சிற்பிக்குத் தோன்றிய எண்ணம், கற்பனை ஆகியவற்றையும், அச்சிலை இருக்க வேண்டிய அமைப்பு, உருவம், சாயல், முகவெழில் முதலியவற்றையும் எவ்வாறு சிந்தித்து அமைத்துக் கொண்டாரோ, அவ்வடிநிலைச் சிந்தனை, அனைத்துநிலைச் செயற்பாடுகளுக்கும் மிகவும் தேவை.

அதன்பின்னர், அவர் சிந்தித்த செயல்முறை வடிவமைப்பு, அதற்குத் தேர்ந்து கொண்ட மூலப் பொருள்கள், அவற்றை உருவாக்க வேண்டிய வழி, வகைகள் ஆகியவற்றையும் கருதிப் பார்த்தல் வேண்டும்.

அவ்வெவ்வேறு வகைச் செயல்களுக்கெல்லாம் உரிய அறிவுத் திறவோரையும், கலைத்திறவோரையும், தொழில் திறவோரையும் அவர்களைக் கொண்டு செய்விக்கும் ஆக்க விளக்கங்களையும் நாம் படிப்படியாக, ஒன்று விடாமல் எண்ணிப் பார்ப்பது நலம்.

இனி, இவ்வுரிமைச் சிலையின் செயல் திறத்தால் நாம் இறுதியாக உணர வேண்டிய செய்திகள் இவை.

1 எவ்வகைச் செயலையும் செய்து முடிப்பதற்குரிய அறிவாற்றலையும் செயல்திறனையும் மாந்தர் இயற்கையாகவே பெற்றிருந்தனர்.

2. ஆனால் அவற்றைப் பயன்படுத்துவதில்தான் வேறுபடுகின்றனர்.

3. செயல்களை எல்லாருமே செய்வர். ஆனால் சிறப்பான செயல்களைச் சிறப்பானவர்களே செய்வர். இதை,

பெருமை யுடையவர் ஆற்றுவார், ஆற்றின்
அருமையுடைய செயல் (975)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். (676)

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு. (470)

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். (664)