பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. வினையறிவு பெறுதல்

1. நூலறிவு

ஒரு வினையை விரும்பித் தேர்ந்து கொண்டபின், அவ்வினையைப் பற்றிய முழு அறிவையும் நாம் பெறுதல், வினை முயற்சிக்கு அடுத்த படிநிலையாகும். ஒரு வினையை விரும்பிய அளவிலேயே அதைச் செய்வதற்குரிய அறிவு நமக்கு ஏற்பட்டுவிடாது. வினை விழைவு அல்லது விருப்பம் வேறு வினையறிவு வேறு விருப்பம் என்பது உயிருக்கு ஏற்கனவே தொடர்பான ஒரு பொருளின் மேல் தானாகச் செல்லும் மன நாட்டம் மனத்துக்குப் பிடித்த ஒரு தொழிலை நாம் மேற்கொள்ளத் திட்டமிட்டவுடன், அத்தொழில் பற்றிய அறிவை நாம் பல வழிகளிலும் பெற்றுக் கொள்ளுதல் மிகவும் இன்றியமையாததாகும். நம்பால் ஏற்கனவே உள்ள அறிவு நுட்பத்துடன் நாம் மேற்கொள்ள விருக்கும் தொழிலறிவு பற்றிய நூல்களை நாம் வருந்திக் கற்றல் வேண்டும். நமக்கு முன்பே உள்ள நிலை விருப்பம் என்னும் மனவுணர்வின் அடிப்படையிலேயே அமைந்து, அதுபற்றிய பொதுவான அறிவையே கொண்டதாகலின், அது தொடர்பான சிறப்பறிவைப் பெறுதற்கு, அத்தொழில் விளக்கம் பற்றிய நூல்களை நாம் கற்றலே, நமக்கு அத்தொழில் தகுதியை உண்டாக்க உதவும்.

ஒரு தொழிலை நாம் தெரிந்து கொள்ளாமல் அத்தொழிலில் ஈடுபடுதலோ, அல்லது அத்தொழில் தெரிந்தாரைக் கொண்டு செய்தலோ நன்மை பயவாது. தொழில் தெரிந்தவர்கள் அதனைச் சரியாகச் செய்கிறார்களா என்று அறிவதற்கும் , அவர்கள் அதனைச் சரிவரச் செய்யாவிட்டால் அவர்கட்கு அறிவுறுத்தற்கும் நமக்கு அத்தொழில் முழு அளவில் தெரிந்திருத்தல் வேண்டும்.

எனவேதான் நூலறிவாலும் செய்முறையறிவாலும் நாம் அத்தொழில்திறன் பெற்றிருத்தல் வேண்டும். அவ்வாறு பெறாமல் ஒரு தொழில் செய்ய முற்படுதல், நமக்கும் பல வகையான இழப்புகளை ஏற்படுத்தும், தொழில் திறன் பெற்றவர்க்கு எவ்வகையான வினைத்தடையும் நேர்வதில்லை.

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்

யாவுள முன்நிற் பவை.

(636)

என்பது குறள்.