பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

செயலும் செயல் திறனும்



தக உடல் வலிவற்றவன் ஈடுபடுதல் கூடாது. அப்படியே தன் அறிவுக்கு மிக மேம்பட்ட ஒரு துறையைப் பற்றி ஒருவன் ஒரு நூலெழுதுவானானால், அந்நூலை உலகம் மதிக்காது. பெருமைப்பட நினைக்காது. மாறாக இழிவாகவே கருதும்.

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்

கொள்ளா அறிவுடை யார்

(404)

போதுமான நூலறிவின்றி, ஒரு துறையில் ஈடுபடுதல் அல்லது அறிந்தார் அவையின் கண் அது பற்றிப் பேசுதல், அரங்கின்றி வட்டாடுதல் ('தாயம்' போலும் விளையாட்டு) போன்றது என்பர் திருவள்ளுவர்.

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல்

(401)

5. தெரியாததில் ஈடுபடவே கூடாது

மேலும் ஒன்றைச் சரிவரக் கல்லாமல், அது கல்வியோ தொழிலோ எதுவாகட்டும், ஒன்றில் ஈடுபட்டு ஒழுகுதல் அல்லது தோல்வியுறுதல், உலகினரை இவனுக்கு ஒன்றுந் தெரியாது என்று அவனுக்குள்ள இயல்பான அறிவு நிலையைக் கூடக் குறைத்து மதிப்பிட்டு, ஐயம் கொள்ளச் செய்துவிடும்.

கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற

வல்லதூஉம் ஐயம் தரும்.

(845)

எனவே, நம் அறிவையும், திறமையையும் அளவிறந்து, மிகுதியாக மதிப்பிட்டுக் கொண்டு எந்தச் செயலிலும் இறங்கிவிடக் கூடாது. நமக்குத் தெரிந்த நம்மால் முடிந்த, தம் வலிமைக்குப் பொருந்திய செயல்களிலேயே, நாம் துணிந்து இறங்குதல் வேண்டும். இக்காலத்தில் ஏற்படும் வினைக் கோளாறுகளில் முக்காற் பங்கு இத் தவறான மதிப்பீடுகளாலேயே ஏற்படுவதாகும் என்று அறிதல் வேண்டும். தன் வலியறிதல் அறியாமை, செருக்கு ஆகியவற்றின் கரணியமாக மிகுதியும் தவறாக உணரப் பெறும் உணர்வாகலின், இதை முதலில் நாம் நன்கு உணர்ந்து செயல்படுதல் இன்றியமையாதது என்க.