பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11. பொருள் தேடல்

1. வினைக்கு முதல் தேவை பொருளே

வினை செய்யப் புகுந்தவன், அதற்குரிய துணை ஒன்றைத் தேர்ந்தபின், வினைக்குத் தேவையான பொருளைத் திரட்டுவதில் தன் கருத்தைச் செலுத்துதல் வேணடும். வினைக்குப் பொருள்தான் முதல் தேவையாகக் கருதுவார் திருவள்ளுவர்.

பொருள், கருவி, காலம், வினை, இடனோடு ஐந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்

(675)

என்பது குறள் பொருளில்லாமல் வினை செய்ய முடியாது. நிலமிருந்தால்தான் வேளாண்மை செய்ய முடிவதைப் போல், பொருள் இருந்தால்தான் வினையைச் செய்ய முடியும் பொருளை வைத்துத்தான் பொருளை ஈட்ட முடியும், சிறிது பொருளை வைத்துப் பெரும் பொருளை ஈட்டவல்ல ஒன்றே வினைத்திறன் என்று சொல்லப் பெறும். வினைக்குப் பொருள் கட்டாயம் தேவையென்பதால், பெரும் பொருள் தான் வேண்டும் என்பதில்லை. எந்த அளவினதாக இருந்தாலும், பொருள் வினைக்கு முதற்கருவி என்றே கருதல் வேண்டும். ஐந்து உருபாவைக் கொண்டு ஏழு உருபா ஈட்டலாம். ஏழு உருபாவை வினையினால் பத்து உருபாவாகப் பெருக்கலாம். பத்து பதினைந்தாகலாம். பதினைந்து இருபத்தைந்தாகப் பெருகலாம். இருபத்தைந்து நாற்பதாகலாம். இப்படிச் சிறு பொருளும் பெரும் பொருளுக்கு ஆக்கமாகும் அளவுக்கு நம் வினையும் வலியதாக உழைப்புடையதாக இருத்தல் வேண்டும். பெரும் பொருள் தேவை என்பதற்காகத் தொடக்கத்திலேயே கடன் பெறுதல் கூடாது. தன் கையிலுள்ள பொருள் சிறிய அளவாக இருப்பினும், அதுவே வினைக்குத் தக்கது. அயலான் கையிலுள்ள பொருளை நம்பி வினையில் ஈடுபடுவது, அக்கரையில் உள்ள படகை நம்பி ஆற்றில் இறங்குவதைப் போன்றது.

2. யானைப் போர்

வினை என்பது யானைப் போரைப் போன்றது என்பார் திருவள்ளுவப் பெருந்தகை. யானைகளுக்குள் நிகழும் போர் அண்டையில் நிற்கும் ஆளையும் அழித்து விடும் தன்மையது. வினைக்கிடையில் நிகழும் போராட்டம், அவ்வினை செய்வானையே