பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

செயலும் செயல் திறனும்



ஒரு நாள் மறந்து விடின் முடிவு பெரும் இழப்புக்குள்ளாகு மன்றோ? அதே போல் வாணிகத்தில் கொடுக்கல் வாங்கலில் மறவர்மை, எழுத்தாளர் தாம் கற்றறிந்தவற்றை மறவாமை, உந்து ஒட்டுநர் போதிய நெய் உள்ளதா என்று பார்ப்பதிலிருந்து, தக்க நேரத்தில் தக்க கருவிகளை இயக்குவதில் மறவாமை, குடும்பத் தலைவி தன் சமையல் வேலையில் தக்க பொருள்களைத் தக்க நேரத்தில் பயன்படுத்துவதில் மறவாமை இப்படி அனைத்து வினைகளிலும் மறவாமையை ஒரு கருவியாகவே கருத வேண்டும் என்பது பொய்யாமொழிப் புலவரின் மெய்யுரை. இவ்வாறு ஒருவன் மிகுகவனமாக இருப்பின் அரிய செயல்களையும் செய்துவிட முடியும் தொழில் நிலைக்கு இம் மறவாமை மிக மிக இன்றியமையாத ஒன்றாகக் கருதுவதால்தான் இதை ஒரு கருவி என்றே குறள் பெருமான் குறிப்பார்.

அரியனன்று ஆகாத தில்லையோச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின் (537)

என்பது பொய்யாமறை.

எனவே, கருவி தேடல் என்னுந் தலைப்பில், நாம் தெரிந்து கையாளப்பட வேண்டிய கருவிகளை நன்றாக உணர்ந்து, அவற்றை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுதலே வினையைச் செப்பமாகவும், நுட்பமாகவும், திட்பமாகவும் செய்வதற்குரியதாகும் என்பதறிந்தோம்.

'பொறிக் குறைவு யாவும் புலக் குறைவே' என்பது 'உலகியல் நூறு'[1] வரி, பொறி அஃதாவது கருவிமேல் குறையில்லை. அதைச் சரிவரத் தேர்ந்து கொள்ளாத நம் அறிவின் மேல்தான் குறை என்பது அவ்வடியின் பொருள். கருவிகளைச் சரிவரக் கையாள்வதற்கு அறிவுத் தெளிவு வேண்டும். ஒரு வினைக்குரிய கருவியைக் கொண்டுதான் அவ்வினை செய்யப் பெறல் வேண்டும் கொடுவாளைக் கொண்டு மரத்தைச் செதுக்க இயலாது. கத்தி முனையால் திருகாணியைத் திருக முற்படுவது தவறு. அவ்வவ் வினைக்குரிய கருவிகளாலேயே அவ்வவ் வினை செய்யப் பெறுதல் வேண்டும். அப்பொழுதுதான் அவ்வினை சரிவரச் செய்யப்பெறும் இல்லெனில் வினைத் தொய்வும் வினைக்குறைவும் ஏற்படும். அடுத்து ஒரு வினையைத் திறம்படச் செய்ய வேண்டுவதற்கு, அவ்வினையை, ஏற்கனவே தெரிந்த ஒருவரைத் துணையாகக் கொள்ளுதல் மிகவும் பயனுடையதாகும். அது பற்றி அடுத்த இயலுள் பேசுவோம்.


  1. உலகியல் நூறு: உலக இயல்புகளை எடுத்துக் காட்டும் நூ. வெண்பாக்கள் அடங்கிய நூல். பாவலரேறு எழுதியது.