பாவலரேறு பெருஞ்சித்திரனார்
89
நொடிப்பொழுதும், இயற்கை நிலைகள் மாறுபட்டுக்கொண்டே இருக்கும் தன்மை வாய்ந்தன என்பதை முதற்கண் நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
இன்றிருக்கும் மனநிலை நாளை இராது. இன்றுள்ள உடல்நலம் அடுத்தநாள் இராது. உடல் நலம் கெடலாம். அல்லது நமக்கேதாவது ஏதங்கள் வரலாம். பலவாறான தடைகள் வரும். இன்று ஒருவன் நமக்கு உதவி செய்வதாகச் சொல்லிச் செல்வான். நாளை வரும்பொழுது அவ்வாறு செய்ய இயலவில்லை என்று சொல்வான். எனவே காலம் மிக மிக இன்றியமையாதது. மேலும் இன்று நம் வினைக்குரியதாக நாம் திரட்டி வைத்திருக்கின்ற செல்வம் நாளை கை தவறிப் போகலாம். திருடு போகலாம். செலவழிக்கப்பட்டுவிடலாம். அல்லது வேறு தேவைகள் வந்து அதனை அவற்றுக்கென ஒதுக்க வேண்டிய கட்டாயம் வரலாம். எனவேதான் வினைக்கு வாய்த்த அல்லது வாய்க்கும் காலம் மிக மிக இன்றியமையாதது.
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்
(489)
என்னும் குறட்பாவிலும்,
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்
(333)
அஃதாவது, நில்லா இயல்பினை உடையது செல்வம். அது வந்து வாய்க்குமானால், நிலைக்கின்ற செயல்களை அங்கே, அப்பொழுதே செய்யத் தொடங்கிவிட வேண்டும் என்றும் குறளாசான் வலியுறுத்துவார்.
மேலும் நம் உடல் நலமும், நமக்குற்ற பருவமும், காலம் என்ற அடிப்படையில் கவனிக்கப் பெற வேண்டிய முகாமையான கூறுகளாகும். நாம் ஒரு செயலைச் செய்து முடிக்க இருபது ஆண்டுகள் ஆகும் என்றால், இருபது ஆண்டுகளுக்குப் பின் நம் நிலை, அகவை, உடல் நிலை எவ்வாறு இருக்கும் என்று கணித்துவிட வேண்டும். கழி முதுமையில் அவ்வாறு நெடிய முயற்சிகளைச் செய்ய நினைத்தாலும் செய்யவியலாது. அதற்குக் காலம் இடந் தராது என்பதை உறுதியாக எண்ணிப் பார்த்தல் வேண்டும்.
ஏராளமாகச் செய்யவேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் நமக்கிருந்தால் போதா. காலமும் நமக்கு வேண்டும். மீளமுடியாத நோய்வாய்ப்பட்ட ஒருவன், நோய் நீங்கிச் செய்ய வேண்டிய பலவாறான வினைகளைத் திட்டமிட்டுக் கொண்டிருப்பதால் என்ன பயன்?
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
(337)
என்றும்