பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

செயலும் செயல் திறனும்



நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்செனறு செய்யப் படும்

(335)

என்றும் திருவள்ளுவப் பேராசான் காலம் கருதுதலை நிலையாமையுள் அடக்கி, நாம் வாழ்கின்ற காலத்தையும் எண்ணிப் பார்க்க வலியுறுத்துவார்.

எனவே காலம் என்பது வேளையோ, பருவமோ, நம் அகவையோ வினைக்குரிய சூழலோ என்றில்லாமல் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு வாய்ப்புக் கூறு என்றே பொருள் கொள்ளுதல் வேண்டும்.

5. இடம் என்றால் என்ன?

இனி இடனறிதல் என்னும் நுட்பத்தையும் நாம் நன்கு தெரிந்து கொள்ளுதல் வேண்டும். பொதுவாக இடம் என்பது நிலம் சார்ந்த பரப்புக்கூறு (Place) என்றே பொருள்பட்டாலும், தன்னிலை, முன்னிலை, படர்க்கை என்றும் நம் சான்றோர்களால் பகுத்துக்கூறும் திறன் வியந்து நோக்குதற்குரியது.

வினை செய்வதற்குரிய இடம், அதற்குரிய கருவிகள், கிடைக்கும் இடம், அதற்குரிய வினையாள்கள் அல்லது தொழில் வினைஞர்கள் வாழ்விடம், அத்தொழிலால் அல்லது வினையால் உருவாகும் பொருள்களை விலைபோக்குதற்குரிய இடம், பொருள் வாய்ப்பு வசதிகள் நிறைந்த இடம் முதலிய அனைத்தையும் உள்ளடக்கிப் பொருள் தருவதாகும் ஒரு நில எல்லையையே இடம் என்னும் சொல் சுட்டும்.

தொடங்கற்க எவ்வினையும்..... இடங்கண்ட பின் அல்லது (491) என்பது திருவள்ளுவப் பேராசானின் முதல் அறிவுரை,

இடனறிந்து செய்யாதவிடத்து, நம் எண்ணங்கள் வலிவிழக்கும். பகைவரது எண்ணம் வலிவு பெற்றுவிடும், என்பது, ஒரு கருத்து.

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து

துன்னியார் துன்னிச் செயின்

(494)

என்னும் குறளுள், பகைவரது எண்ணங்கள் முறியடிக்கப்பெற வேண்டுமாயின், நாம் வினைமேற் கொள்ளும் இடத்தைச் சரியாகத் தேர்ந்து எடுத்துக்கொள்ளுதல் வேண்டும் என்பார் திருவள்ளுவர்.

இங்கும் இடம் என்பது பாதுகாப்பான, வினை செய்வதற்குரிய பகைவர்கள் எளிதில் நெருங்க இயலாத முயற்சிகளுக்கேற்ற வாய்ப்புகள் மிகுந்த இடம் என்று பொருள்படுவதாகும்.

ஞாலங் கருதினும் கைகூடும் காலங்

கருதி இடத்தாற் செயின்

(483)

என்பதை நன்கு எண்ணிப் பார்த்தல் வேண்டும்.