பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

செயலும் செயல் திறனும்



பெறுவதற்காகக் காலத்தைத் தாழ்த்தலாம். இடத்தைக்கூட மாற்றலாம். மழைக்காலத்தில் சதுப்பு நிலத்தில் தொடங்கும் போர் வெற்றி பெறுவதற்குரிய வாய்ப்பை உறுதியாகத் தரும் என்று சொல்ல முடியாது. ஆகையால், அங்குக் காலத்தைப் பின் தள்ளுவதும், இடத்தை மாற்றியமைப்பதும் தவறாகா என்று அறிதல் வேண்டும்.

இனி, நாம் ஒரு வினை முடிவதற்குரியதாக ஒரு காலத்தைத் தேர்ந்தெடுத்துக் காத்துக் கொண்டிருக்கையில், அவ்வினை அக்குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே கனிந்து முடியும் என்னும் நிலை தோன்றினால், குறிப்பிடப்பெற்ற காலத்திற்காகக் காத்துக் கொண்டிராமல், வினை வந்து சூழ்வுற்ற காலமே அதற்கு ஏற்ற காலம் என்று கருதி, அப்பொழுதே அவ்வினையைச் செய்யத் தொடங்கிவிடுதல் வேண்டும். இவ்விடத்தில் இடத்தையும் கூட அவ்வாறு கருதுதல் வேண்டும்.

எய்தற் கரிய(து) இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற் கரிய செயல்.

(489)

என்பது திருவள்ளுவம் இடம் என்பது சில நேரம் காலத்தையும் சுட்டுவதாக அமையும். மேல் காட்டப் பெற்ற குறளில் அந்நிலை என்பது காலத்தையும் இடத்தையும் இணைந்து சுட்டும் ஒரு பொருள் பொதிந்த சொல்.

9. இயற்கை இயைபு

இனி, ஒரு செயல் நடைபெற மாந்த முயற்சியும் இயற்கையின் இயைபு நிலையும் பொருந்தி வருதல் வேண்டும் என்பதை நாம் மேலும் தெரிந்து கொள்ளுதல், செயல் திறனுக்கு உரிய இன்னொரு நுட்பக் கூறாகும். மழைக் காலத்தில் விதைப்பது என்பது இயற்கையை அறிதலும் மாந்த முயற்சியும் இயைபுபட்ட ஒரு செயலுக்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். எனவே, காலம் கருதுதல் என்பது இயற்கையால் வந்துறும் காலம் என்றும் பொருள் தருவதாகும். தரவே, எய்தற்கரியது இயைவது என்பது இயற்கையாக ஏற்படுத்திக் கொடுக்கும் பருவக் காலங்களையும் வானியல், கோளியல் ஆகியவற்றால் அமையும் காலத்தையும் ஒருவாறு குறித்ததாகவும் பொருள் கொள்ளலாம். இனி, இயற்கையின் இயைபு நிலை என்பது, நமக்கு மட்டுமே இயைந்த செயலாகவன்றி, நம் அனவரையும் இயைபுப்படுத்தி இயங்கும் ஒரு பொதுநிலைச் செயலாகவே இருக்க முடியும் ஆகலின், அது வகுத்துக் கொடுக்கும் காலத்தையே நாம் எதிர்பார்த்து நம்பியிராமல், நம் முயற்சியையும் நாம் கருதியிருத்தல் வேண்டும் என்பதற்காகவே,

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்

(619)