13 கல்வெட்டுக்கள் ஊர்களைச் சர்வமான்யங்களாகச் சேதுபதி மன்னர்கள் வழங்கி உள்ளனர். சேது நாட்டிலும் பாண்டிய, சோழ நாட்டிலும் இந்த ஊர்கள் அமைந்திருந்தாலும் அவைகளின் வருவாய்கள் தமிழ்நாடு அரசு மூலமாக இந்தத் திருக்கோயிலுக்கு இன்றும் கிடைத்து வருகின்றன. இதனைப் போன்றே "பக்தர்களெல்லாம் பார் மேல் சிவ புரமென" ஏத்தும் திரு உத்திரகோசமங்கை திருக்கோயிலின் கட்டுமானத்திற்கும், நாளார்ந்த கட்டளைகளுக்கும் ஏற்ற நிரந்தர ஏற்பாடுகளையும் இந்த மன்னர்களே செய்து வைத்துள்ளனர். இங்குதான் திருவாதவூர் எனப் போற்றப்படும் மணிவாசகப் பெருமான் தவமிருந்து திருப்பணி செய்து திருவாசகப் பாடல்களை இயற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாண்டிய நாட்டில் தேவார பாடல் பெற்ற 16 கோயில்களில் சேதுநாட்டைச் சேர்ந்த திருச்சுழியல், திருவாடானை, காளையார் கோவில், திருப்புத்துர், திருக்கொடுங்குன்றம், இராமேஸ்வரம் ஆகிய திருக்கோயில்களும், சிறப்புடன் இயங்குவதற்கான ஏற்பாடுகளையும் இந்த மன்னர்களே செய்துள்ளனர். இந்தக்கோயில்கள் அனைத்தும் சைவ சமயத்தின் சிறப்பான தளங்களாக விளங்குவதாலும், சேதுபதி மன்னர்களும் சைவ சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்ததனாலும் மட்டும், இங்கெல்லாம் அவர்களது திருப்பணிகள் இடம் பெற்றிருக்கின்றன என்று நினைத்தால் அது தவறானதாகும். ஏனெனில் சேதுபதிகளின் ஆட்சி சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல சைவ சமயத்தாருக்கு மட்டும் அமைந்திருக்கவில்லை. மாறாக அவர்களது சமயப்பொறை அனைத்து சமய மக்களிடத்தும் நிலைபெற்று இயங்கி வந்தது. சேது நாட்டில் மிகச் சிறப்பான வைணவத் தலங்களான திருப்புல்லணை. திருக்கோஷ்டியூர் ஆகிய திருத்தலங்கள் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டவை. இந்த இருபெரும் கோயில்களும் சேது மன்னர்களது கொடைகளுக்கு இலக்காகி