பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

சேதுபதி மன்னர் வரலாறு

விளங்கி வந்தனர். இந்த மன்னரோ புரவலராக மட்டுமல்லாமல், தமிழ்ப் புலவராகவே அமைந்து விளங்கியது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. மேலும் ஏராளமான தமிழ் இசைப்பாடல்களையும், பிறமொழிப் பாடல்களையும் இவரே இயற்றியுள்ளார். அவை, காயகப்பிரியா, ரசிகரஞ்சனம் என்ற இரு தொகுப்புக்களாக 1860-ல் அச்சில் வெளிவந்துள்ளன.

இன்னொரு குறிப்பிடத்தக்க செய்தி இந்தச் சிறந்த பெரும் புலவர், இசைமேதை, மறவர் சீமையின் பாரம்பரிய கலைகளான விற்போர், ஈட்டி எறிதல், வாள் சண்டை ஆகியவைகளிலும் மிகச்சிறப்பாக விளங்கினார் என்பது ஆகும். தமிழ்ப்புலவரும் வள்ளலுமான இவரது தமையனார் பொன்னுசாமித் தேவர் என்பவர் இம்மன்னரது அரசியல் நிர்வாகப் பிரச்சனைகளுக்கு உதவி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். முதலாவது முத்துராமலிங்க சேதுபதிக்கு வாய்த்த பிரதானி உச்சிநத்தம் முத்து இருளப்ப பிள்ளையைப் போன்று சேதுநாட்டின் ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களுக்கு இவர் மிகவும் உதவினார். 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவரை ஒத்த அரசியல் அறிஞர் அப்பொழுது வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். இராமநாதபுரம் சமஸ்தானம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கு எளிதாகத் தீர்வு கண்டதுடன் தனது தம்பியும், மன்னருமான முத்துராமலிங்க சேதுபதியின் அரசியல் முடிவு பற்றிய வழக்குகளை மதுரை, சென்னை நீதிமன்றங்களிலும் இறுதியாக இங்கிலாந்து நாட்டு இலண்டன் நகரப் பிரிவி கவுன்சில் மன்றத்திலும் சிறப்பாகப் பாடுபட்டு வெற்றி பெற்றார்.

இவர் ஒரு தமிழ் வள்ளல், சாகித்திய இசைப்புலவர், தமிழ்ப் புரவலர். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரைக் கொண்டு சைவ சாத்திரங்களை வெளியிட்டு உதவினார். அவரது சொந்த ஆக்கமான இசைப்பாடல்களைத் தொகுப்பாக அச்சிட்டு கி.பி. 1861-ல் வெளியிட்டார். பழனி மாம்பழக் கவிராயர் போன்ற சிறந்த தமிழ்ப் புலவர்களை ஆதரித்ததுடன், சேது புராணம் போன்ற இலக்கியங்களை சொந்தச் செலவில் அச்சிட்டு, தமிழ்ப் புலவர்களுக்கு இலவசமாக அனுப்பி வைத்தார். இதற்கெல்லாம் மேலாக தில்லையம்பூர் புலவர் சந்திர சேகர புலவரைக் கொண்டு தமிழகத்தின் பல பகுதிகளிலும் பாடப்பட்டு வந்த தனிப் பாடல்களைத் தொகுக்கச் செய்து தமிழில் முதன் முறையாகத் தனிப்பாடல் திரட்டு என்ற நூல் வெளியீட்டை அச்சில் கொணர்ந்தார். இவர், பாஸ்கர, தினகர் என்ற இரண்டு ஆண் மக்களையும். இராணி பானுமதி என்ற பெண் மகளையும் தமது வாரிசாக விட்டுத் தமது 32-வது வயதில் கி.பி. 1873-ல் காலமானார்.