பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

சேதுபதி மன்னர் வரலாறு

6. அமெரிக்க நாட்டு சிகாகோ நகரில் நடைபெற்ற அனைத்து உலக சமயப் பேரவையில் கலந்து கொண்டு இந்திய நாட்டிற்குப் பெருமையும் புகழும் தேடித் தந்த சுவாமி விவேகானந்தர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பினார். இந்திய நாட்டில் 23-1-1897-ல் அவர் கரையிறங்கிய முதல் துறைமுக ஊர் பாம்பன் ஆகும். தமது பயணத்திற்குப் பொன்னும் பொருளும் வழங்கி வழிகோலிய மன்னர் பாஸ்கர சேதுபதிக்கு நன்றி தெரிவிப்பதற்காக சுவாமிகள் 25.1.1897-ல் பாம்பனிலிருந்து இராமநாதபுரத்திற்கு வருகை தந்தார். அவரை மன்னர் மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் இராமலிங்க விலாசம் கொலு மண்டபத்தில் சிறப்பான தர்பார் ஒன்றில் வரவேற்று உபசரித்தார்.

7. இதனைப் போன்றே 1897-ல் சிருங்கேரி மடம் மடாதிபதி ஜகத்குரு நரசிம்ம பாரதி சுவாமிகளை மன்னர் அவர்கள் அரண்மனை கொலு மண்டபத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கி உபசரித்தார்.

8. சென்னை தாம்பரம் கிறித்துவ கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியரான பரிதி மாற் கலைஞர் என வழங்கப்பட்ட சூரிய நாராயண சாஸ்திரியின் ‘கலாவதி’ என்ற புதுமையான நாடகம் கி.பி. 1901-ல் மன்னர் பாஸ்கர சேதுபதியின் அவையில் நடித்துக் காட்டப்பெற்று அரங்கேற்றம் பெற்றதுடன் நாடகக் கலைஞர்களுக்கும் ஆசிரியருக்கும் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

9.1925-ல் இராமநாதபுரம் நகருக்கு வருகை தந்த ஆங்கில கவர்னர் கோஷன் துரையை மன்னர் மூன்றாவது முத்து இராமலிங்க சேதுபதி இராமலிங்க விலாசம் அரண்மனையில் மிகுந்த ஆடம்பரத்துடன் வரவேற்று விருந்தளித்தார்.

இந்த கொலு மண்டபத்தைச் சில காலம் கிழக்கிந்திய கம்பெனியின் கலெக்டர் ஜாக்சன் தமது கச்சேரியாகப் பயன்படுத்தி வந்தார். அவரது அழைப்பினை ஏற்றிருந்தும் பேட்டி காண வராத பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன் மூன்று மாதங்கள் கழித்து விசாரணைக்காக 14.9.1797ல் கலெக்டர் ஜாக்சன் முன்னர் ஆஜரானதும் இங்கு தான் கலெக்டரது கடுமையான சொற்களினால் மிகவும் பீதியடைந்த கட்டபொம்மன் நாயக்கர் இங்கிருந்து தப்பி ஓடினார். இதன் தொடர்ச்சியாக 15.10.1798-ல் கயத்தாறுவில் தூக்கிலிடப்பட்டார்.