பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இயல் - XI
என்றும் நிலைத்து நிற்க

தமிழகத்தின் வரலாற்றில் மூவேந்தர்களுக்கும் பல்லவர்களுக்கும் அடுத்தபடியாகச் சிறந்த இடத்தைப் பெற்றிருப்பவர்கள் இராமநாதபுரம் சேதுபதிகள் ஆவர். இந்த மன்னர்கள் சமயத் துறையிலும், சமுதாயப் பணிகளிலும் தமிழ் வளர்ச்சியிலும் மகத்தான தொண்டினை ஆற்றி இருக்கின்றனர். குறிப்பாக 17,18,19 வது நூற்றாண்டுகளில் தமிழகத்தை அந்நியர்களான வடுகர்களும், மராட்டியர்களும், ஆற்காட்டு நவாப்பும் சீர்குலைத்து வந்த நிலையில் தெய்வ சிந்தனையுடன் மக்கள் நலத்தை மதித்துப் போற்றி வந்த இந்த மரபினரது செயல்கள் என்றும் மறக்க முடியாதவை.

கி.பி.11.12 ஆம் நூற்றாண்டுகளில் வரலாற்றை அலங்கரித்த சோழப் பேரரசு நிலைகுலைந்த பிறகு பிற்காலப் பாண்டியர்கள் வலுவிழந்து வளமையிழந்து ஒடுங்கியிருந்தனர். ஆனால் இந்தக் காலத்தில் தமிழகத்தின் சிறிய தன்னரசின் மன்னர்களான சேதுபதிகள் மிகச் சிறந்த சாதனைகளை இயற்றியுள்ளனர். திரு உத்திர கோசமங்கை, இராமேஸ்வரம், திருவாடானை, திருக்கோட்டியூர், திருப்புல்லாணி, காளையார்கோவில் ஆகிய ஊர்களில் விண்ணை அளாவிய இராஜ கோபுரங்களுடன் காட்சியளிக்கும் அந்தத் திருக்கோயில்களே அவர்களது தொண்டிற்குச் சாட்சியாக நின்று வருகின்றன.

இந்தத் திருக்கோயில்களில் நாள்தோறும் நடைபெறும் ஆறுகால, ஐந்து கால வழிபாடுகளுக்கும் ஆண்டு விழாக்கள் மற்றும் சிறப்புக் கட்டளைகள் ஆகியவற்றுக்கும் இந்த மன்னர்கள் வழங்கியுள்ள நூற்றுக்கணக்கான ஊர்களின் வருவாய்களிலிருந்து இன்னும் இந்தத் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனைப் போன்றே இந்த மன்னர்கள் திருமடங்களுக்கும் அன்ன சத்திரங்களுக்கும் பள்ளி வாசல்களுக்கும் தேவாலயங்களுக்கும் பல கிராமங்களைச் சர்வ மானியமாக வழங்கியுள்ளனர். ஆனால் இந்த அறக்கொடைகளைப்