பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முனைவர்
கோ. விசயவேணு கோபால்

முதுநிலை ஆய்வாளர், கல்வெட்டியல் துறை
பிரெஞ்சு இந்தியவியல் ஆய்வகம்

பாண்டிச்சேரி
அணிந்துரை

எளிய மக்கள் தங்களது அயராத உழைப்பினாலும் தந்நலமற்ற தொண்டினாலும் பணிவினாலும் படிப்படியாகப் படைவீரர், படைத்தலைவர் என உயர்ந்து இறுதியில் குறுநிலப் பகுதிகளின் மன்னர்களாகவும் ஆக முடியும் என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர்கள் மறவர் சீமையினர். தமிழகச் சிற்றரசர் மரபினர்களில் இவர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். வேளிர், மலையமான்கள், அதியமான்கள், தொண்டைமான்கள், முத்தரையர், இருக்குவேளிர், வானாதிராயர்கள் எனத் தமிழகம் பல சிற்றரசு மரபினர்களைக் கண்டுள்ளது. இந்திய வரலாற்றில் போர்வழியிலன்றி ஆன்மிக நெறியில் நின்று இந்தியா முழுவதிலும் புகழ்படைத்த மரபினர் சேதுபதி மரபினர். பிற்காலத் தமிழகத்தில் குறிப்பாக ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு முந்திய காலகட்டத் தமிழக வரலாற்றில் இவர்களின் பங்கு கொடை ஆகியனபற்றிய விரிவான வரலாறு இன்றும் எழுதப்படவில்லை. குறிப்பாகத் 'தமிழ்ப் புத்தாக்கம்" (Modernization of Tamil) என்ற உயர்ந்த, புதுமையான - இன்றும் மிகத் தேவையான - குறிக்கோள் கோட்பாட்டினை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்த முழுமனத்துடன் செயல்பட்ட மரபினர் இவர்கள். இந்தப் பணிபற்றியும் இவர்கள் காலத்தே தமிழ்ப் பண்பாட்டில் நிகழ்ந்த வடநெறியாக்கம் (Sanskritization) மேலைமரபாக்கம் (Westernization) பெருந்தாக்கங்கள் பற்றியும் விரிவாக எழுத இடமுண்டு. இத்தகைய சூழலில் இம்மரபினரின் தொடர்ச்சியான வரலாற்றினையேனும் எழுதவேண்டும் என்ற முனைப்பில் எனது அருமை நண்பர் டாக்டர் எஸ்.எம். கமால் அவர்கள் இச்சிறுநூலைப் படைத்துள்ளார்கள். ஏற்கனவே பாஸ்கர சேதுபதி, முத்துராமலிங்க சேதுபதி, பாண்டித்துரைத் தேவர் ஆகியோரைச் சிறுசிறு நூல்களாகச் சேதுபதி மன்னர் சிலரைப் பற்றி எழுதிய இவர் இந்நூலை எழுதுவதற்கு முழுத் தகுதியுடையவர். இந்நூலில் இவர் குறிப்பிட்டுள்ள படி இம்மன்னர்களது வரலாற்றினைத் தெளிவாகவும், கோவையாகவும், விளக்கமாகவும் எழுதத் துணைபுரியக் கூடிய முதன்மை ஆதாரங்கள் (Primary Sources) பல கவனக் குறைவாலும், புறக்கணிப்பினாலும், வரலாற்றுணர்வின்மையாலும்