இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
394
சைவ இலக்கிய வரலாறு
விழிமிழலைக் கல்வெட்டும் இருவரையும் ஒருவராகக் கோடற் கேற்ற வலியுடையதாக இல்லை; இதைக் கொண்டு திருமாளிகைத் தேவரும் சேந்தனாரும் ஒருவரே என்னாது இருவேறு சான்றோர்களாகக் கொண்டு நிலவும் கேள்வி வழிச்செய்தி தவறுடைய தென்பது பொருத்தமாக இல்லை என்று[1] கூறுகின்றார்.
இனி, இந்தோனேசியாவில் தொல்குடிச் செல்வர் வீடுகளில் திருமணக் காலத்தில் இத் திருப்பல்லாண்டு ஓதப் பெறுகிறதென்றும், இதற்கு அவர்கள் "லாண்டு பாடு" என்று பெயர் கூறுவரென்றும், இது "மான்கடில்” எனத் தொடங்கும் என்றும் மேனாட்டறிஞர்[2] உரைக்கின்றனர். மான்கடில் என்பது திருப்பல்லாண்டின் முதற் பாட்டின் முதற் சீராகிய “மன்னுக தில்லே” என்றதன் சிதைவு.