பக்கம்:சொன்னார்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18



மனச்சாட்சியும் நம்பிக்கையும் தூண்டும் வழியிலேயே செல்வதற்காக அந்தணனாய்ப் பிறந்த நான், பொதுமக்கள் மாத்திரமேயல்லாது, தற்கால ஒழுங்கால் லாபம் பெறும் என் உறவினர்கள் சிலருங்கூட என்னிடம் வெறுப்புக் கொண்டு என்னைப்பற்றி முறையிடவும், என்னை வசைமொழி கூறவும், பாத்திரமானேன். ஆனால் இத்துன்பங்கள் எவ்வளவு பெருகினாலும், நான் பொறுமையுடன் சகிக்கக் கூடும். ஏனெனில், எனது தாழ்மையான முயற்சிகள் இப்போதில்லா விட்டாலும், எக்காலத்திலாவது நியாயமானவை எனக் கருதப்பட்டுப் பலராலும் நன்றியறிதலுடன் ஒப்புக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை எனக்குப் பூரணமாக உண்டு.

—ராஜாராம் மோகன்ராய்

தெரு ஒரத்தில் மசால்வடை போட்டு விற்பார்களே அந்த வாசனை அடிக்கிற போதெல்லாம் அதை வாங்கித் தின்ன வேண்டுமென்ற ஆசை வரும். யாராவது போய் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தால் சாப்பிடுவோம். ஆனால் வெட்கம். நாலு பேர்கள் பார்ப்பார்களே என்பதால், அங்கே நாமே போக மாட்டோம். இப்படித் தான் இன்னமும் சில பொய்யான பாவனையில் இருந்து கொண்டிருக்கிறோம்.

—திருமதி செளந்திரா கைலாசம் (27-1-1972)

சுற்றிலும் சட்டம் கட்டிய மேஜையின் வழவழப்பான பலகை மீது, பந்துகளை ஒரு கம்பினல் இடித்து, ஒன்றோடொன்று மோதவிட்டுக் குழிகளில் விழச்செய்யும் பில்லியார்ட்ஸ் ஆட்டத்திற்கும், கோலியாட்டத்திற்கும் அதிக வித்தியாசம் இல்லை. பில்லியார்ட்ஸ் ஆட்டத்திற்கான மேஜை, முதலிய உபகாரணங்களுக்கு ரூ 50 ஆயிரம் போல செலவு செய்வதைவிட, நாம் ஏன் கோலி ஆடக்கூடாது? விலை மலிவாகவும் பழங்காலத்தைச் சேர்ந்ததாகவும் உள்ள எதையும் மட்டமாக நினைக்கும் மனப்பான்மை நமக்கு இருக்கிறது.

—ராஜாஜி (23-12-1959)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/20&oldid=1010350" இலிருந்து மீள்விக்கப்பட்டது