பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

109



தமிழ் வளர்க்கத் தமிழ்ப்பண்ணை நடத்துகிறார். அவரது கருத்துக்க்ளை அலட்சியப்படுத்திவிட முடியாது.

அவர் நகைச்சுவையாகவே பேசிவிடுவதால் அவர் எங்களைத் தாக்கினாலும் நாங்கள் சிரித்து மகிழ்வோம்” என்று இந்த விதமாக என்னைப் பாராட்டிப் பேசினார்.

அரசியல் மேடையில் எவ்வளவோ காரசாரமாக அண்ணாவை நான் தாக்கிப் பேசியிருக்கிறேன். ஆயினும் அண்ணா நேரில் சந்திக்கும்போது அதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டார். கோபப்படமாட்டார். அதற்கு மாறாக எங்கு என்னைச் சந்தித்தாலும் மகிழ்ச்சி பொங்கப் பேசுவார்.

ஒருமுறை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற பம்மல் சம்பந்த முதலியார் விழாவில் அண்ணா அவர்கள் தலைமையில் நான் பேச வேண்டி வந்தது. அப்பொழுது அண்ணா அவர்கள், “எனது அன்பிற்குரிய நண்பரும், மக்களை மகிழ்விப்பதற்காகவே சொற்பொழிவாற்றுபவருமான திரு சின்னஅண்ணாமலை இப்பொழுது பேசுவார்” என்று அறிவித்தார்.

இந்த மாதிரி, மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும் தன் வயப்படுத்தக் கூடிய ஆற்றல் அண்ணா அவர்களுக்கு இருந்தது. யாரிடம் திறமை இருந்தாலும் அதை அனுபவிக்கும் அறிவு அவருக்கு இருந்தது.

வேலைக்காரி நூறாவது நாள் விழாவில், அண்ணா அவர்கள் பேசும் பொழுது, “நாமக்கல் கவிஞரின் ஆற்றலை நாடறியச் செய்தவர், என் நானறியச் செய்தவர் சின்ன அண்ணாமலை. எனது ‘வேலைக்காரி’ நாடகம் சிறப்பான திரைப்படமாக உருவெடுத்து நூறு நாள் ஒடியிருக்கிறது. அதற்காக நான் அகந்தை அடையவில்லை. என்னைவிட மிகச்சிறந்த கதை எழுதக்கூடியவர் நாமக்கல் கவிஞர்.