பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

சொன்னால் நம்பமாட்டீர்கள்


நேரமாகியது. நான் ராஜாஜியின் அன்பினால் திணறித் திக்குமுக்காடிப் போய் பேச்சை ஆரம்பித்தேன்.

“ராமபிரானுடைய ஆண்மையும், கிருஷ்ணனுடைய ராஜதந்திரமும், புத்தருடைய தூய்மையும், சிபிச்சக்ரவர்த்தியின் தியாகமும், ராமானுஜரின் மதப் பக்தியும், வள்ளுவரின் வாய்மையும் சேர்ந்து உருவெடுத்து வந்திருப்பவர் ராஜாஜி.”

“ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் மூலம் இந்து மதத்திற்குப் புத்துயிர் உண்டாயிற்று. தமிழ்நாடு அப்பொழுது விழித்தெழுந்தது. அவர்கள் இருவரும் இந்த வங்காளத்தில் பிறந்தவர்கள்.

பின்னர் மற்றொரு வங்காள வீரர் விபின் சந்திரபாலர் சென்னைக்கு விஜயம் செய்து தம்முடைய ஆறு பிரசங்கங்களின் மூலம் தமிழ் நாட்டில் தேசபக்தியை உண்டாக்கினார்.

“தேசபந்து தாஸ் வக்கீல் தொழிலை விட்டு நாடு முழுதும் பெரிய கிளர்ச்சியை உண்டாக்கினார். ராஜாராம் மோகன்ராய், ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி போஸ் முதலியோர்களால் தமிழ் நாட்டுக்கு எவ்வளவோ லாபம் ஏற்பட்டிருக்கிறது”

“சென்ற பல வருஷ காலமாக வங்காளம் எங்களுக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்திருக்கிறது. அப்பேர்ப்பட்ட வங்கத்திற்கு நாம் என்ன கைமாறு செய்யலாம். செய்ய முடியும் என்று ஏங்கிக் கொண்டிருந்தோம்.

“ஆனால் அதெற்கெல்லாம் வட்டியும் முதலுமாக எங்கள் ராஜாஜியை உங்களுக்குக் கவர்னராகக் கொடுக்கிறோம். ராஜாஜியை கவர்னராக அடைய இவ்வங்காளம் 100 வருஷ காலம் தவம் செய்திருக்க வேண்டும்,“ என்று கூறியபோது, “ராஜாஜிக்கு ஜே” என்ற கோஷம் வானை அளாவியது.