பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொல்காப்பிய மாநாடு

மேடையில் நன்றாகப் பேசத் தெரிந்தவர்களுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கும் என்று பலர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சமயம் ஒரு வேடிக்கையான அனுபவம் ஏற்பட்டது. கோயமுத்தூர் நகரத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை அவர்களைப் பாராட்டி நிதி அளிப்பதற்காக ஒரு விழா நடத்த வேண்டுமென்று திரு.ஜி.ஆர். கோவிந்தராஜுலு நாயுடு அவர்களும் சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களும் என்னை கோவையில் சில காலம் தங்கும்படி செய்தார்கள்.

விழா சம்பந்தமான வேலைகளில் நான் ஈடுபட்டிருந்தேன். சமயம் கிடைக்கும்போதெல்லாம் கோவையிலும், சுற்றுப் புறங்களிலும் அரசியல்-இலக்கியச்சொற்பொழிவுகள் நிகழ்த்திக் கொண்டிருந்தேன்.

இச்சமயத்தில் கோவை கல்லூரி ஒன்றில் ‘தொல்காப்பிய மாநாடு’ ஒன்று நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாநாட்டை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை அவர்கள் துவக்கி வைக்க ஒப்புக்கொண்டார்கள்.

மேற்படி மாநாட்டன்று நாமக்கல் கவிஞர் அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டபடியால் நாமக்கல்லிலிருந்து கோவைக்கு அவரால் வர இயலவில்லை.