பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பூட்டை உடையுங்கள்

1942 போராட்டத்தில் நான் சிறையிலிருந்து விடுதலை அடைந்ததும் சென்னை தியாகராய நகரில் தமிழ்ப்பண்ணை என்ற புத்தக வெளியீட்டகம் துவக்கினேன். அப்போது பல தலைவர்களும் தொண்டர்களும் விடுதலையாகாமல் சிறையி லிருந்தார்கள்.

அவர்களை எல்லாம் விடுதலைசெய்து தேசத்தில் ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டையைத் தகர்க்க வேண்டும் என்ற கருத்துடன், “பூட்டை உடையுங்கள்“ என்று ஒரு நூல் வெளியிட்டேன். இந்தத் தலைப்பைப் பார்த்த ஆங்கிலேய அரசு, சிறைப்பூட்டை உடைக்கும்படி தூண்டுகிறேன் என்று கூறி என்னைக் கைது செய்தது. இத்துடன் “வங்காளப் பஞ்சம்-“ “ஜப்பான் வருவானா?” என்ற புத்தகங்களை வெளியிட்டதற்காகவும் கைது செய்யப்பட்டேன்.

வழக்கு எழும்பூர் பிரதம மாகாண மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நடைபெற்றது. மாஜிஸ்ட்ரேட் ஒரு தெலுங்கர், பெயர் கோடீஸ்வர ராவ், சுத்தமாகத் தமிழ் தெரியாது.

“பூட்டை உடையுங்கள்” என்பதை அவருக்கு Break open the lock என்று மொழிபெயர்த்துக் கொடுத்து விட்டார்கள். இதை வைத்துக் கொண்டு அவர் “எதுக்கு மேன் ஜெயில் பூட்டை உடைக்கும்படி சொன்னே?” என்று கேட்டார்.

நான் அவருக்குப் பணிவுடன், “பூட்டை உடையுங்கள் என்பதற்கு நாள் கொள்ளும் அர்த்தம் Desolve the dead lock என்பதாகும்.” என்றேன்.