பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

157



கூட்டமாகச் சிலர் வந்து என்னை மிகக் கேவலமாகத் திட்டினார்கள். பேச்சும் போக்கும் அவர்கள் திராவிடக்கழகத்தினர் என்பது தெளிவாகத் தெரிந்தது.

லோகநாதன் என்ற ஒரு இளைஞர் என் சட்டையைப் பிடித்து இழுத்துக் கிழித்து, “ஏண்டா நீ தானே கூட்டங்களில் பெரியாரைத் தாறுமாறாகப் பேசுகிறாய்.” இனி அம்மாதிரி பேசினால் காலை கையை ஒடித்துவிடுவோம்.

இப்போது நீ ஒரு தமிழன் என்பதினால் (பிராமணன் அல்லாதவன்) உன்னை உயிரோடு விடுகிறோம்” என்று கூறினார். இம்மாதிரி இம்சைகளுக்கிடையே பஸ் ஏறினேன். பஸ்ஸை சுற்றி நின்றுகொண்டு மேற்படி நபர்கள் பலவாறு கூச்சலிட்டார்கள். பஸ் கண்டக்டரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு, “பேமானி” என்றும் “கழுதை” என்றும் திட்டி, காங்கிரஸ் மீது வசைபாடினார்.

இவ்வளவையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு கிழிந்த சட்டையுடன் தலைவர் காமராஜ் இல்லத்திற்குச் சென்றேன். என் அலங்கோல நிலையைப் பார்த்துப் பதறிப்போன காமராஜ் விஷயத்தை விசாரித்துத் தெரிந்து கொண்டார். அவருக்கு அபார கோபம் வந்துவிட்டது.

டெலிபோனை எடுத்து அப்போதைய முதலமைச்சராக இருந்த திரு. குமாரசாமி ராஜா அவர்களைக் கூப்பிட்டு, “என்ன கவர்ன்மெண்ட் நடத்துறீங்கண்ணே, கதர் சட்டை போட்டவன் வீதியிலே நடக்க முடியலே, மந்திரிங்க மட்டும் காருலே கொடி போட்டுக்கிட்டு போனாபோதுமான்னேன்” என்று கூறி என் சம்பந்தமாக நடந்ததைச் சொல்லி, “இதற்கு உடனே ஏதாவது செய்தாகணும்” என்று சொல்லிவிட்டு ‘டக்’ கென்று போனை வைத்துவிட்டார்.